மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் பாக்கு தோப்பில் நுழைந்த பாகுபலி

ஊருக்குள் வந்த பாகுபலி யானை பாக்கு மரங்களை உடைத்து விழுங்கியது. வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாகுபலியை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்தனர்.
மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் பாக்கு தோப்பில் நுழைந்த பாகுபலி
Published on

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியே வந்த ஒற்றை ஆண் காட்டுயானை சமயபுரம், நெல்லித்துரை, குரும்பனூர், தாசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்தது.நீண்ட தந்தங்கள், மிகப்பெரிய உருவத்துடன் காட்சியளித்த அந்த யானைக்கு உள்ளூர் மக்கள் பாகுபலி என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்.

இது பெரும்பாலும் இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியே வந்து கிராமங்களுக்கு அருகில் உள்ள விவசாய தோட்டத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம்.

இந்த நிலையில் பாகுபலி யானைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாயில் காயம் ஏற்பட்டது. எனவே அதற்கு சிகிச்சை அளிப்பது என கால்நடை மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர். இதற்காக அந்த யானையை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆனாலும் பாகுபலி சிக்கவில்லை.

இதற்கிடையே யானைக்கு வாயில் இருந்த காயம் தானாகவே சரியாகி விட்டது. எனவே பாகுபலி யானையை பிடிக்க வேண்டாம் என மருத்துவ குழுவினர் அறிக்கை அளித்தனர்.

இதனை தொடர்ந்து காட்டுயானை பாகுபலி வழக்கமான வலசை பாதையில் இருந்து விலகி அடர் வனத்திற்குள் சென்று விட்டது. அதன்பிறகு அந்த யானையை ஊருக்குள் பார்க்க முடியவில்லை. எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில் பாகுபலி யானை 2 மாதங்களுக்கு பிறகு இன்று அதிகாலை கல்லார் பகுதியில் உள்ள பாக்கு தோப்புக்கு வந்தது. அங்கு இருந்த பாக்கு மரங்களை உடைத்து விழுங்கியது.

இதனை தற்செயலாக பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாகுபலியை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்தனர்.

சுமார் 2 மாத இடைவெளிக்கு பிறகு பாகுபலி யானையின் நடமாட்டம் மீண்டும் உறுதி செய்யப்பட்டு உள்ளதால், அதனை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com