

அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கனகசுந்தரவடிவேல்(வயது 62). விவசாயியான இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கும், அவரது மனைவி மாலாவிற்கும் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த 15-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு கோயம்புத்தூர் சென்று விட்டார். இந்நிலையில் அதே பகுதியில் கனகசுந்தரவடிவேல் உள்பட 3 பேரின் வீட்டின் கதவு நெம்பி உடைக்கப்பட்டு இருந்ததை அக்கம் பக்கத்து வீட்டினர் பார்த்துள்ளனர். இதை அடுத்து கனகசுந்தரவடிவேலுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சொந்த ஊருக்கு விரைந்து வந்த கனகசுந்தரவடிவேல் வீட்டில் நகைகள் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 3 பவுன் தங்க நகைகளும், நாணயங்களும், 1 கிலோ வெள்ளிப் பொருட்களும் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தா.பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.