search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சி.சி.டி.வி. காட்சியால் துப்பு துலங்கியது- தி.மு.க. பிரமுகரின் காரில் ரூ.17 லட்சம் கொள்ளையடித்தது ஆந்திர கும்பல்?
    X

    உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.

    சி.சி.டி.வி. காட்சியால் துப்பு துலங்கியது- தி.மு.க. பிரமுகரின் காரில் ரூ.17 லட்சம் கொள்ளையடித்தது ஆந்திர கும்பல்?

    • நேற்று பாளையில் உள்ள 2 வங்கிகளில் இருந்து ரூ.17 லட்சத்தை அவரது டிரைவர் துரை எடுத்துள்ளார்.
    • எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் துணிகர சம்பவம் நடந்துள்ளது.

    நெல்லை:

    பாளை மகாராஜநகர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவ அய்யப்பன். தி.மு.க. பிரமுகர். இவரிடம் தியாகராஜநகரை சேர்ந்த துரை என்பவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    ரூ.17 லட்சம் கொள்ளை

    நேற்று பரமசிவ அய்யப்பன் கூறியதன் பேரில், பாளையில் உள்ள 2 வங்கிகளில் பரமசிவ அய்யப்பனின் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.17 லட்சத்தை அவரது டிரைவர் துரை எடுத்துள்ளார். பின்னர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள வங்கிக்கு சென்ற துரை பணத்தை காரில் வைத்து பூட்டிவிட்டு உள்ளே சென்றார்.

    சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.17 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக நெல்லை கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் உத்தரவின்பேரில் பாளை இன்ஸ்பெக்டர் வாசிவம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சி.சி.டி.வி. ஆய்வு

    சம்பவம் நடந்த இடத்தின் அருகே கல்லூரி, வங்கி ஆகியவையும், சிறிது தூரத்தில் பாளை போலீஸ் நிலையமும் உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் துணிகர சம்பவம் நடந்துள்ளது.

    வங்கி நுழைவு வாயிலில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காமிராவில் காரின் டிரைவர் இருக்கை பகுதி மட்டுமே தெரிகிறது. இதனால் அதில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகவில்லை.

    பின் தொடர்ந்து வந்த கும்பல்

    அதன் அருகே போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சி.சி.டி.வி.யிலும் காட்சிகள் தெளிவாக இல்லை. இதனால் டிரைவர் துரை, ஏற்கனவே பணம் எடுத்த 2 வங்கிகளும் உள்ள பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை தனிப்படையினர் ஆய்வு செய்தனர்.

    இதில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் காரை பின் தொடர்வது தெரியவந்தது. மேலும் சம்பவ நேரத்தில் அந்த பகுதியில் உள்ள செல்போன் பதிவுகளை பட்டியல் சேகரித்தும், விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் கொள்ளை கும்பல் பற்றிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை தேடிய போது, அந்த கும்பல் ஆந்திராவுக்கு தப்பி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்து உள்ளனர்.

    Next Story
    ×