நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் திடீர் தர்ணா

நெல்லை மாநகராட்சி அலுவலத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.அ.தி.மு.க. கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டார்.
தர்ணாவில் ஈடுபட்ட அ.தி.மு.க. கவுன்சிலரை படத்தில் காணலாம்.
தர்ணாவில் ஈடுபட்ட அ.தி.மு.க. கவுன்சிலரை படத்தில் காணலாம்.
Published on

நெல்லை:

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகர பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் மனு அளித்தனர்.

மேயர் சரவணன், துணைமேயர் ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

மாநகராட்சி 28-வது வார்டு கவுன்சிலர் சந்திரசேகர் அளித்த மனுவில், நெல்லை மாநகர பகுதியில் சமீபத்தில் கால்வாய்களை தூர்வாரும் பணி தொடங்கியது.

அப்போது எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கால்வாயில் இருந்து தூர்வாரிய சாக்கடையை, வயல் தெரு பகுதியில் ரூ. 14 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு வரும் சிறுவர்கள் பூங்கா பகுதியில் கொட்டி விட்டார்கள்.

இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதனை அப்புறப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அதிகம் வசிக்கும் தெருக்களில் குடிநீரில் சாக்கடை கலந்து ஓடுகிறது. சுத்தமான குடிநீர் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

தொடர்ந்து அவர் பூங்காவில் சாக்கடை கழிவுகள் கொட்டியதை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்ட பொதுஜன பொது நல சங்கத்தின் தலைவர் அயூப் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நெல்லையின் சிறப்பான அடையாளங்களில் ஒன்றாக திகழக்கூடிய ஈரடுக்கு மேம்பாலத்தில் உள்ள மின் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் போதிய வெளிச்சம் தராததின் காரணமாக பாலம் இருட்டாகவே காட்சியளிக்கிறது. கம்பீரமாக காட்சியளிக்க வேண்டிய பாலம் பொலிவிழந்து காணப்படுகிறது.

இதில் பயணிக்கின்ற வாகனங்கள் அதிலும் குறிப்பாக 2 சக்கர வாகனங்கள் பாலத்திலுள்ள குண்டு குழிகளை கவனிக்காமல் அதில் விழுந்து நிலை தடுமாறி செல்லும் நிலையும் உள்ளது.

நல்ல வெளிச்சம் தரும் கூடுதல் வெளிச்சம் கொண்ட விளக்கினை பொருத்திட ஆவண செய்ய வேண்டும். மேலும் பாலத்தில் சில இடங்களில் நீண்ட இடைவெளி விட்டு மின் கம்பங்கள் உள்ளது.

அதையும் கண்டறிந்து அந்த இடத்திற்கு கூடுதல் மின் கம்பங்களை ஏற்படுத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com