search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர்நிலைகளை ஆக்கிரமித்து சாலை அமைத்த கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- பொதுமக்கள் மனு
    X

    நீர்நிலைகளை ஆக்கிரமித்து சாலை அமைத்த கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- பொதுமக்கள் மனு

    • குழந்தைகள், வேலைக்கு செல்வோரும் அவ்வழியாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
    • வீடுகளில் விரிசல் ஏற்பட்டும், சுவாசப் பிரச்சினைகளாலும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காமன்தொட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சப்படி கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரி மற்றும் பல கிரானைட் தொழிற்சாலைகள் சட்டவிரோதமாகவும், அரசு விதிகளை மீறியும் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள சேஷாத்திரி ஏரி நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைத்துள்ளனர். அப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்து சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகளால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தூசி படிந்து பயிர்கள் பாழாகின்றன. அதே போல இப்பகுதியில் உள்ள கோபால் சாகர் ஏரி, தின்னூர் ஏரி பராமரிப்பு பணி செய்ய, ரூ.55 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றக்கோரி மனு அளித்து, வருவாய் துறையினர் நிலங்களை அளந்து கல் நட்ட பின்பும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இது குறித்து கேட்டால் ஊர் பொதுமக்கள் மீது போலீசார் பொய் வழக்கு போடுகின்றனர்.

    அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகளால் பெரிய சப்படி முதல் காமன்தொட்டி வரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விவசாய நிலங்கள் பாழடைந்தும், பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்வோரும் அவ்வழியாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    வீடுகளில் விரிசல் ஏற்பட்டும், சுவாசப் பிரச்சினைகளாலும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே மேற்கண்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×