search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிபோதையில் தகராறு செய்த வாலிபர் வெட்டி கொலை
    X

    குடிபோதையில் தகராறு செய்த வாலிபர் வெட்டி கொலை

    • சதீஷ்குமார் அவரிடமும் தகராறு செய்து மகாலட்சுமியை அரிவாளால் வெட்ட முயன்றார்.
    • அண்ணணை தம்பியே அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கவுந்தப்பாடி அருகே உள்ள சூரநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு சதீஷ்குமார்(34). நகுலன் என 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் குப்புசாமி கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். சதீஷ்குமார் மரம் அறுக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நகுலன் பவானி அருகே உள்ள காடையாம்பட்டியில் சாய தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். அண்ணன்- தம்பி இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

    சதீஸ்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் மது போதையில் கிராமத்தில் உள்ள பலரிடமும் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சதீஸ்குமார் குடிபோதையில் அதே பகுதியை சேர்ந்த 2 பேரிடம் தகராறில் ஈடுபட்டார்.

    அதை பார்த்த அவரது தம்பி நகுலன், அண்ணன் சதீஸ்குமாரை வீட்டிற்கு அழைத்து சென்று உள்ளார். வீட்டிற்கு சென்ற பின்பு சதீஷ்குமார் அங்கு இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு தன்னிடம் தகராறு செய்த 2 பேரையும் வெட்டி கொலை செய்ய போவதாக கிளம்பி உள்ளார்.

    அப்போது வீட்டில் இருந்த அவரது தாய் மகாலட்சுமி சதீஸ்குமாரை தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் அவரிடமும் தகராறு செய்து மகாலட்சுமியை அரிவாளால் வெட்ட முயன்றார்.

    அதை பார்த்த நகுலன், அண்ணன் சதீஸ்குமாரை தடுத்துள்ளார். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சதீஸ்குமார் கீழே விழவே, அவர் வைத்திருந்த அரிவாளை பிடுங்கிய நகுலன் ஆத்திரத்தில் சதீஸ்குமாரின் கழுத்தில் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே சதீஸ்குமார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கவுந்தப்பாடி போலீசார் சதீஷ்குமார் வீட்டுக்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.

    பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து அண்ணனை கொலை செய்த அவரது தம்பி நகுலனை கைது செய்தனர்.

    குடிபோதையில் தகராறு செய்த அண்ணணை தம்பியே அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×