

வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள மோர்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லு (வயது 44). இவர் கூலி வேலை செய்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் இவரது தாய்மாமன் பாலா என்ற முருகையா (53). இவர்களுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக நிலத்தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு முருகையா மற்றும் அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினர் மாரியப்பன் (51) ஆகியோர் நல்லுவிடம் நிலம் தொடர்பாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆத்திர மடைந்த இருவரும் சேர்ந்து நல்லுவை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் நல்லுவிற்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த நல்லுவின் மனைவி கருப்பாத்தாள் கணவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நல்லு உயிரிழந்தார். இதையடுத்து கருப்பாத்தாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வடமதுரை எஸ்.ஐ. அங்கமுத்து வழக்கு பதிவு செய்து முருகையா மற்றும் மாரியப்பன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.