search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில்  வாணிப  குடோனில் வைத்திருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள  7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயம்
    X

    தருமபுரியில் வாணிப குடோனில் வைத்திருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள 7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயம்

    • முன்னுக்குப்பின் முரணான வகையில் எண்ண முடியாதபடி நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர்.
    • பிறகு தான் எத்தனை மூட்டைகள் மாயமானது என்பது முறையாக அறிவிக்க முடியும்.

    தருமபுரி,

    தருமபுரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக, திறந்த வெளி குடோனில் 7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமானதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, நல்லம்பள்ளி, மாரண்டஅள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

    தருமபுரி மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் விளையும் நெல், தருமபுரி மாவட்ட மக்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் மாதந்தோறும் டெல்டா மாவட்டங்களிலிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு அவைகளை தருமபுரிக்கு சரக்கு ெரயில் மூலம் கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு வரும் நெல் மூட்டைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான தருமபுரி மாவட்ட கலெக்டர் பங்களா பின்புறத்தில் உள்ள திறந்த வெளி குடோனில் அடுக்கி வைத்து சேமிக்கப்படுகிறது.

    அரிசி தேவை என்ற பட்சத்தில் லாரிகள் மூலம் நெல் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கிறது. ஆலைகளில் நெல் அரைத்து பச்சரிசியாக, தருமபுரி மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து தஞ்சாவூர், நாகப்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தருமபுரிக்கு சரக்கு ெரயில் மூலம் 22 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதனை நுகர்பொருள் வாணிப கழக குடோனில் வைக்கப்பட்டிருந்தது.

    அதில் இருந்து சுமார் 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானதாக புகார் எழுந்தது. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் விஜிலென்ஸ் போலீசார் வந்து சோதனை செய்துள்ளனர். இதில் 7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமாகி யிருப்பது உறுதியானது. இதையடுத்து அதிகாரிகள், தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து விஜிலென்ஸ் அதிகாரிகள் கூறும்போது:

    நுகர்பொருள் வாணிப கழக குடோனில் இருந்து நெல் மூட்டைகள் குறைந்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி தருமபுரியில் நாங்கள் சோதனை செய்தபோது வழக்கமாக மூட்டைகளை எளியமுறையில் எண்ணும் வகையில் வரிசையாக அடுக்கி வைக்கப்படுவது வழக்கம். ஆனால், இங்கு அதற்கு மாறாக முன்னுக்குப்பின் முரணான வகையில் எண்ண முடியாதபடி நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். இதனால் சுமார் 7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் ஆகும். மேலும், அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை அரவைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதன் பிறகு தான் எத்தனை மூட்டைகள் மாயமானது என்பது முறையாக அறிவிக்க முடியும். இதுகுறித்து அனைத்து தகவல்களை அறிக்கையாக உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது முறையான நடவடிக்ைக எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் தருமபுரி கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள குடோனில் வைக்கப்பட்டிருந்த 22 ஆயிரம் டன் நெல் மூட்டைகளில் சில நெல் மூட்டைகள் குறைந்துள்ளதாக, விஜிலென்ஸ் போலீசார் தெரிவித்ததையடுத்து அதிகாரிகள் உத்தரவின் பேரில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 80 அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைத்து, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல்களை அரவைக்கு அனுப்பினால்தான், குறைவான நெல் குறித்து தெரியவரும். தற்போது ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் தாமதம் ஆகிறது. விரைவில் கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

    Next Story
    ×