search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணா சாலையில் 4 வழி மேம்பாலம் ரூ.621 கோடி செலவில் கட்டப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு
    X

    அண்ணா சாலையில் 4 வழி மேம்பாலம் ரூ.621 கோடி செலவில் கட்டப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு

    • மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பெருக்க, சாலைக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அரசு அதிக முன்னுரிமை அளிக்கின்றது.
    • பல முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்து சாலைப் பாதுகாப்பும் மேம்படும்.

    சென்னை:

    2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்பு விவரம் வருமாறு:

    மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பெருக்க, சாலைக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அரசு அதிக முன்னுரிமை அளிக்கின்றது.

    முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.1,407 கோடி செலவில் 148 கி.மீ. சாலைகளை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளும், 524 கி.மீ. சாலைகளை ரூ. 803 கோடி மதிப்பில் இருவழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    வரும் ஆண்டில் ரூ.621 கோடி மதிப்பீட்டில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் 4 வழி மேம்பாலம் கட்டப்படும். பன்னாட்டுப் பொறியியல் நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்று சென்னை மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதைகளுக்கு மேல் கட்டப்பட உள்ள இந்த மேம்பாலம் ஒரு நவீன பொறியியல் சாதனையாக அமையும்.

    இப்பணிகள் நிறைவுற்றவுடன், பல முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்து சாலைப் பாதுகாப்பும் மேம்படும்.

    பருவ மழை மற்றும் வெள்ளக் காலங்களின் போது போக்குவரத்து துண்டிக்கப்படாமல் இருக்க ரூ.996 கோடி மதிப்பீட்டில் 215 தரைப்பாலங்களுக்கு பதிலாக உயர்மட்டப் பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சென்னை புறவட்டச் சாலை திட்டத்திற்காக ரூ.1,847 கோடியும், சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டத்திற்கு ரூ.1,500 கோடியும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம்-IIக்கு ரூ.645 கோடியும் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இம்மதிப்பீடுகளில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.19,465 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×