தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 பேர் கைது

அரியலூர் மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்கடலூர் ,சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை
தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 பேர் கைது
Published on

அரியலூர்,

அரியலூர் ராஜாஜி நகர், ஆர்.கே.காலனித் தெருவைச் சேர்ந்த பொன்சேகர் மனைவி பொன்ராணி என்பவர் கடந்த 18 ஆம் தேதி பிற்பகல் ஓ. கிருஷ்ணாபுரம் பகுதியில் இரு ஸ்கூட்டரில் சென்ற போது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், பொன்ராணி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துத்துக் கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து அவர் அரியலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, அரியலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர்கணேஷ் தலைமையில் அரியலூர் காவல் நிலைய ஆய்வாளர் சகாய அன்பரசு, உதவி ஆய்வாளர் ராஜவேலு உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் புதன்கிழமை அவர்கள் அம்மாக்குளம் பிரிவுப் பாதையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது, சந்தேகப்படும் வகையில் நம்பர் பிளேட் பாதி அழிக்கப்பட்ட கருப்பு மற்றும் சிவப்பு நிறங்கள் கலந்த பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பெரம்பலூர் வடக்குமாதவி சாலை, ஏரிக்கரையைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் வெங்கடேஷ்(22), அதே பகுதி சமத்துவப் புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஜித்(19) ஆகியோர் என்பதும், இவர்கள் கடந்த 18 ஆம தேதி பொன்ராணியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றவர்கள் என்பதும், தொடர்ந்து இவர்கள் கடலூர் மாவட்டத்தில் இரண்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு, சேலத்தில் ஒரு செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். குறுகிய காலத்தில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com