வேகக் கட்டுப்பாட்டு விதிகள் அமல்: சென்னையில் முதல் நாளில் 121 வழக்குகள் பதிவு

வேகக் கட்டுப்பாட்டு விதிமுறையை கடைபிடிக்காமல் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.வேகக் கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்ட முதல் நாளில் 121 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேகக் கட்டுப்பாட்டு விதிகள் அமல்: சென்னையில் முதல் நாளில் 121 வழக்குகள் பதிவு
Published on

சென்னை:

சென்னை பெருநகரத்தில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வாகன ஓட்டிகளுக்கு வேக வரம்பை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, இலகுரக வாகனங்கள் அதிகபட்சமாக 60 கிலோமீட்டர் வேகத்திலும், கனரக வாகனங்கள் அதிகபட்சமாக 50 கிலோமீட்டர் வேகத்திலும் செல்ல வேண்டும்.

இருசக்கர வாகனங்கள் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்திலேயே செல்ல வேண்டும். ஆட்டோக்கள் 40 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க வேண்டும். குறிப்பாக, குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகையான வாகனங்களும் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டுமென போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, இந்த வேகக்கட்டுப்பாட்டு விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அமலுக்கு வந்துள்ள வேகக் கட்டுப்பாட்டு விதிமுறையை கடைபிடிக்காமல் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் வேகக் கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்ட முதல் நாளில் 121 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ரூ.1.21 லட்சம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com