கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

நந்தி பெருமானுக்கு 16 வகை அபிஷேகத்துடன் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா சிவராத்திரி விழா தொடங்கியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Published on

சரவணம்பட்டி,

கோவை கோவில்பாளையத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த காலகாலேஸ்வரர் கோவில் உள்ளது.

இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் மஹா சிவராத்திரி விழா நடந்தது.

நேற்று மாலை 4.30 மணிக்கு சனி பிரதோஷ பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து நந்தி பெருமானுக்கு 16 வகை அபிஷேகத்துடன் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா சிவராத்திரி விழா தொடங்கியது.

இரவு 8 மணிக்கு முதல் கால பூஜை வேள்வி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிவபெருமானுக்கு அபிஷேகத்துடன் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இரவு 11 மணிக்கு 2-ம் கால பூஜையும், இரவு 2 மணிக்கு 3-ம் கால பூஜை மற்றும் 108 சங்காபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால பூஜை நடைபெற்று மகா சிவராத்திரி விழா நிறைவு பெற்றது. ஒவ்வொரு கால பூஜை முடிந்தவுடன் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

இந்த விழாவில் கோவில்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com