

இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறி அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. அவருக்கு தூதரக உதவிகள் மறுக்கப்பட்ட நிலையில், அவரது தண்டனையை எதிர்த்து நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு வரும்வரை குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்திவைக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை மறுவிசாரணை செய்யவேண்டும் என பாகிஸ்தான் மனு தாக்கல் செய்திருந்தது. தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த ஜாதவ் மனுவை, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதற்கிடையே, ஜாதவின் தாயார் அவந்திகா ஜாதவ், தனது மகனை பார்க்க அனுமதிக்க வேண்டும். இதனால் அவருக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை விசா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அந்த கடிதத்துக்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
இதுதொடர்பாக சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் பதிவிடுகையில், ஜாதவ் தாயாரின் விசா குறித்து நான் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சர்தாஜ் அஜிசுக்கு கடிதம் எழுதினேன். ஆனால், அவர் இன்னும் எந்த பதிலையும் அளிக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சுஷ்மாவின் டுவிட்டருக்கு பதிலளிக்கும் வகையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இன்று விளக்கம் அளித்துள்ளது.