மாதம் 35 ரூபாய் வாடகையைகூட கட்டாத காங்கிரஸ் அலுவலகம்

அலகாபாத்தில் இயங்கி வரும் காங்கிரஸ் அலுவலகம் மாதம் ரூ.35 வாடகையை கூட கட்டாததால் அதன் உரிமையாளர் காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். #Congress
காங்கிரஸ் கட்சி அலுவலகம்.
காங்கிரஸ் கட்சி அலுவலகம்.
Published on

அலகாபாத்:

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள சவுக் லொக்காலிட்டி என்ற இடத்தில் காங்கிரஸ் அலுவலகம் உள்ளது.

இது, கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் அலுவலகமாக செயல்படுகிறது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே காங்கிரஸ் அலுவலகமாக மாறி இருந்தது. இது, 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது.

காங்கிரஸ் முதுபெரும் தலைவர் தாண்டன், நேரு மனைவி கமலா, இந்திரா காந்தி ஆகியோர் இந்த அலுவலகத்துக்கு பலமுறை வந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர்.

இந்த அலுவலகம் தனியாருக்கு சொந்தமானதாகும். அதை காங்கிரஸ் அலுவலகமாக வாடகைக்கு அமர்த்தி இருந்தனர்.

தற்போது இந்த இடம் ராஜ்குமார் சரஸ்வத் என்பவருக்கு சொந்தமாக உள்ளது. அவர், கட்டிடத்துக்கு 35 ரூபாய் மாத வாடகையாக நிர்ணயித்து இருந்தார். அந்த வாடகையை கூட காங்கிரஸ் கட்சி முறையாக செலுத்தவில்லை.

10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு பைசா கூட வாடகை கொடுத்தது இல்லை. இவ்வாறு ரூ. 50 ஆயிரம் வரை வாடகை பாக்கி உள்ளது.

கட்டிட உரிமையாளர் பல முறை கேட்டு பார்த்தும் யாரும் அந்த பணத்தை கொடுப்பதாக இல்லை. இதனால் அவர் வாடகையை கொடுங்கள் அல்லது இடத்தை காலி செய்யுங்கள் என்று கூறி காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீசு அனுப்பி உள்ளார்.

இந்த விவரங்களை காங்கிரஸ் கட்சியினர் கட்சி தலைவர் ராகுல்காந்திக்கும் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். கட்சி அலுவலகம் இருக்கும் இடம் அலகாபாத்தின் மிக நெருக்கடியான பகுதி ஆகும்.

அந்த சொத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும். ஆனால் 35 ரூபாய் வாடகையை கூட காங்கிரஸ் கட்சி கொடுக்க முடியாமல் இருப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. #Congress

X

Maalai Malar
www.maalaimalar.com