

சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வாசித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
தமிழ்த்திரை உலகில் மாபெரும் சகாப்தமாக விளங்கிய பழம்பெரும் கதாநாயகனும், சிறந்த பாடகரும், ரசிகர் பெருமக்களால் எம்.கே.டி. எனவும் அன்புடன் அழைக்கப்படுபவர் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர்.
அன்பும், அடக்கமும், எளிமையும் மிகுந்த தியாகராஜ பாகவதரின் கலையுலக வாழ்வு 1934-ம் ஆண்டு பவளக்கொடி என்ற திரைப்படத்தின் மூலம் அரங்கேறியது. தியாகராஜ பாகவதர் பல்வேறு தமிழ்த் திரைப்படங்களில் நடித்த பெருமைக்குரியவர். இவர் நடித்த ஹரிதாஸ் என்னும் திரைப்படம் மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரைப்பட உலகில் கோலோச்சிக் கொண்டிருந்த பெருமைக்குரியவர்.
தியாகராஜ பாகவதரின் இசைவளம் செறிந்த குரல், அனைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கப்பட்டது. இவருடைய கர்நாடக சங்கீத பாடல்கள் அன்றும், இன்றும் மக்கள் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்றால் அது மிகையாகாது. இவர் பல வெற்றிப் படங்களை வழங்கி தனக்கென ஒரு தனி முத்திரை பதித்தவர்.
திரைப்படத் துறையிலும், பாரம்பரிய இசைத் துறையிலும் தியாகராஜ பாகவதரின் பன்முக பங்களிப்பினையும், சாதனையையும் அங்கீகரிக்கும் வகையிலும், அவரது நினைவினைப் போற்றும் வகையிலும், தமிழ்நாடு அரசு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் தியாகராஜ பாகவதருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முதல்-அமைச்சர் எடப்பாடியார் இன்றைக்கு அம்மா வழியிலே பல்வேறு தலைவர்களின் சிலைகளுக்கு பிறந்த நாளன்று அரசு விழாவாகக் கொண்டாடி பெருமை சேர்த்து வருகிறார்கள்.
அந்த வகையிலே, இன்று தமிழ் சினிமாத் துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கதாநாயகன் எம்.கே.டி. என்று போற்றப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டமைக்கு என்னுடைய சார்பிலும், ஒட்டுமொத்த திரைத் துறையின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியை எடப்பாடியாருக்கு இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன்.