

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் வாழ்ந்துவரும் முஸ்லிமல்லாத பிற மதங்களை சேர்ந்த மக்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதாவுக்கு பாராளுமன்ற கூட்டுக்குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவை அறிமுகம் செய்துவைத்து பேசிய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் மேற்கண்ட நாடுகளில் சிறுபான்மையினத்தவர்களாக இருந்து, இந்தியாவுக்கு வந்து வாழ விரும்பும் இந்து, ஜைன, கிறிஸ்தவ, புத்த, பார்சி மதத்தினர் பயனடைவார்கள் என்று குறிப்பிட்டார்.
ஆனால், காங்கிரஸ் உள்பட சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அசாம் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த அசாம் கன பரிஷத் கட்சி மத்திய அரசின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அம்மாநில அரசுக்கு அளித்துவந்த ஆதரவை நேற்று விலக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.