தலைமை செயலகத்தில் மத்திய மந்திரி ஆய்வு கூட்டம் நடத்தியது ஜனநாயகத்துக்கு எதிரானது: முத்தரசன்

அ.தி.மு.க. இரு அணிகளின் இணைப்பு எடப்பாடி கையிலோ, பன்னீர் செல்வம் கையிலோ இல்லை. பிரதமர் மோடியின் கையில் தான் உள்ளது என முத்தரசன் கூறினார்.
தலைமை செயலகத்தில் மத்திய மந்திரி ஆய்வு கூட்டம் நடத்தியது ஜனநாயகத்துக்கு எதிரானது: முத்தரசன்
Published on

கோவை:

கோவையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தின் புதுப்பிக்கப்பட்ட கட்டிட திறப்பு விழா, ஜீவானந்தம் சிலை திறப்பு விழா இன்று நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு அலுவலகம், சிலையை திறந்து வைத்தார்.

அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு, மத்திய அரசின் மிரட்டலுக்கு அஞ்சி தமிழகத்தின் உரிமைகளை பறிகொடுத்து வருகிறது. தங்களது பதவிகளை காப்பாற்றி கொள்ள அ.தி.மு.க.வினர் மத்திய அரசிடம் தமிழக மக்களின் உரிமைகளை பறிகொடுத்துள்ளனர்.

தமிழக காவல்துறையும் கூட பிரச்சினைக்காக போராடும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவுகிறது. முதல்-அமைச்சர் தொகுதியான எடப்பாடி அருகே நங்கவள்ளியில் குடிநீருக்காக போராட்டம் நடத்த போவதாக கூறிய கட்சி நிர்வாகி ஜீவானந்ததை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்காக போராட்டம் நடத்திய துணை பொதுச் செயலாளர் சுப்பராயன் மீது போலீசார் தாக்கியுள்ளனர்.

இதற்கு காரணமான ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மீது டி.ஜி.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.அ.தி.மு.க.வை 2 பிரிவாக பிரித்து அவர்களை அடிமையாக்கி ஜனநாயக அத்துமீறலை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழக சட்டசபையை கூட்டி மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்த வேண்டும். மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுவதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று திட்டவட்டமாக இதுவரை சொல்லவில்லை. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.

அ.தி.மு.க. இரு அணிகளின் இணைப்பு எடப்பாடி கையிலோ, பன்னீர் செல்வம் கையிலோ இல்லை. பிரதமர் மோடியின் கையில் தான் உள்ளது. மத்திய அரசு வருமான வரித்துறையை ஆயுதமாக கொண்டு அரசியல் கட்சிகளை மிரட்டி வருகிறது.

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்த அ.தி.மு.க. அஞ்சி நடுங்குகிறது.

தமிழகத்தின் 9-வது முதல்- அமைச்சராக எடப் பாடி பழனிச்சாமி உள்ளார். இதுவரை தலைமை செயலகத்தில் மத்திய மந்திரி ஆய்வு கூட்டம் நடத்தியது இல்லை. இது ஜனநாயகத்துக்கு எதிரானது

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com