சசிகலா சொத்துக்களை பறிக்க நடவடிக்கை: மத்திய அரசு அதிரடி உத்தரவு

சசிகலா குடும்பத்துக்கு தொடர்புடைய போலி நிறுவனங்களின் சொத்துக்களை கண்டறிந்து அவற்றை பறிக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சசிகலா சொத்துக்களை பறிக்க நடவடிக்கை: மத்திய அரசு அதிரடி உத்தரவு
Published on

மத்திய அரசு கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்தது.

அடுத்த கட்டமாக போலி நிறுவனங்கள் மற்றும் பினாமி சொத்துக்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது 3 லட்சத்துக்கும் அதிகமான போலி நிறுவனங்களின் கணக்குகளில் ரூ.1,321 கோடி டெபாசிட் செய்யப்பட்டது. இந்த போலி நிறுவனங்களின் படடியலை அமலாக்கத் துறை தயாரித்தது. அதன்படி அந்த நிறுவனங்கள் யாருடையது என்ற விவரங்களையும் சேகரித்துள்ளது.

3 லட்சம் போலி கணக்குகளில் நீண்ட காலமாக செயல்பாட்டில் இல்லாமல் இருந்த 2.2 லட்சம் நிறுவனங்களின் பதிவுகளை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்து விட்டது. இந்த போலி நிறுவனங்களில் இயக்குனர்களாக இருந்த 1.06 லட்சம் பேரை நிதி பரிவர்த்தனை முறைகேடு செய்ததாக கூறி மத்திய அரசு அவர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இவர்கள் 5 ஆண்டுகளுக்கு பிற நிறுவனங்களில் பணி புரியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட போலி நிறுவனங்கள் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இயக்குனர்களின் பெயர்களை மத்திய தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டது.

போலி நிறுவனங்கள் பட்டியல் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா, கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா உள்பட பல பிரபலங் கள் தொடர்புடைய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

போலி நிறுவன பட்டியலில் சசிகலா குடும்பத்துக்கு தொடர்புடைய ‘பேன்சி ஸ்டீல்ஸ்’, ‘ரெயின்போ ஏர்’, ‘சுக்ரா கிளப்’, ‘இந்தோ தோகா கெமிக்கல்ஸ் அன்ட் பார்மா சூட்டிகல்ஸ்’ ஆகியவை பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த நிறுவனங்களின் சொத்துக்களை கண்டறிந்து அவற்றை பறிக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விரைவில் இதற்கான நடவடிக்கைகள் தொடங்க இருக்கிறது. போலி நிறுவனங்களின் சொத்துக்களை அடையாளம் காணும் பணியை மாநில அரசு உடனடியாக மேற்கொண்டு முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

நில ஆவணங்கள் அனைத்தும் தெளிவாக இருப்பதால் சொத்துக்களை கண்டுபிடிப்பதில் பெரிய சிக்கல் இருக்காது. இதற்கிடையே போலி நிறுவனங்களின் சொத்துக்களை வேறு பெயரில் மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவதை தடுக்கவும், இதற்கு உதவி செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மத்திய-மாநில அரசுகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com