வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் வி‌ஷம் குடித்த தனியார் பஸ் கண்டக்டர் உயிரிழப்பு

வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் வி‌ஷம் குடித்த தனியார் பஸ் கண்டக்டர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழப்பு
உயிரிழப்பு
Published on

வேலூர்:

வேலூர் அடுத்த ஊசூர் தெள்ளூர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு மகன் ஏழுமலை (வயது 22). தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் குடும்பத்தகராறு காரணமாக மனமுடைந்த ஏழுமலை விவசாய பயிர்களுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து விட்டார்.

மயக்கமடைந்த அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி ஏழுமலை இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த அவருடைய உறவினர்கள் இன்று காலையில் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் டீன் அலுவலகம் உள்ள கட்டிடத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிகிச்சையில் இருந்த ஏழுமலை நன்கு குணமடைந்து வந்ததாகவும் டாக்டர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் அவர் இறந்துவிட்டதாகவும் கூறினர். எனவே உடலை வாங்க மாட்டோம். தவறான சிகிச்சை அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வி‌ஷம் குடித்த ஏழுமலையின் உடலில் ஏற்கனவே வி‌ஷம் ரத்தத்தில் கலந்துவிட்டதால் அவர் மிக மோசமான நிலையில் தான் சேர்க்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை அளித்தும் அவர் இறந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.இதுபற்றி போலீசார் அவரது உறவினர்களிடம் எடுத்து கூறினர். இதனால் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com