போகி கொண்டாட்டம்- பழைய பொருட்களை எரித்ததால் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

சென்னையில் போகி பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்களுடன் பிளாஸ்டிக் பொருட்களையும் ஆங்காங்கே எரித்ததால் காற்று மாசு அதிகரித்துள்ளது.
சாலையில் வாகனங்கள் தெரியாத அளவுக்கு சூழ்ந்திருந்த புகை மூட்டம்
சாலையில் வாகனங்கள் தெரியாத அளவுக்கு சூழ்ந்திருந்த புகை மூட்டம்
Published on

சென்னை:

மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகி பண்டிகையை தமிழகம் முழுவதும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்யும்போது, வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி தீயிட்டு கொளுத்துகின்றனர். பொருட்களை எரித்து, மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

அதிகாலையில் பழைய பொருட்களை ஆங்காங்கே சேகரித்து எரித்ததால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. பனி மூட்டத்துடன் இந்த புகையும் சேர்ந்ததால் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. காலையில் விடிந்து வெகுநேரமாகியும் எதிரே வாகனங்கள் செல்வது கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் மற்றும் புகை மூட்டம்  சூழ்ந்திருந்தது.

தலைநகர் சென்னையில் அதிகாலை முதலே தேவையற்ற பொருட்களை பொதுமக்கள் சாலையோரம் குவித்து எரித்ததால் கடும் புகை மூட்டம் எழுந்தது. அரசு அறிவுறுத்தலையும் மீறி பல்வேறு இடங்களில் டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரித்ததால் நச்சுவாயுவுடன் கடுமையான புகைமூட்டம் எழுந்தது. இதனால் காற்று மாசுபாடு அதிகரித்தது. மணலி, ஆலந்தூர், அண்ணாசாலை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு காற்று மாசு காணப்பட்டது.

புகை மூட்டம் காரணமாக சென்னை முழுவதும் சாலையே தெரியாத அளவுக்கு புகை சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி, மிகவும் எச்சரிக்கையுடன் மெதுவாக பயணித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com