ஜி.எஸ்.டி.யால் மக்களுக்கும், வணிகர்களுக்கும் முழுமையான பலன் கிடைக்கும்: வருமான வரித்துறை கமிஷனர்

ஜி.எஸ்.டி.யால் மக்களுக்கும், வணிகர்களுக்கும் முழுமையான பலன் கிடைக்கும் என்றும் வருமான வரித்துறை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி.யால் மக்களுக்கும், வணிகர்களுக்கும் முழுமையான பலன் கிடைக்கும்: வருமான வரித்துறை கமிஷனர்
Published on

சென்னை:

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரி தலைமை அலுவலகத்தில் நேற்று 157-வது வருமானவரி தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி வருமான வரி தலைமை அலுவலகம் வண்ண பலூன்கள் மற்றும் தோரணங்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

வருமானவரி செலுத்தவேண்டியதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி நடைபெற்றது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரி முதன்மை தலைமை கமிஷனர் காலே ஹரிலால் நாயக், வருமானவரி புலனாய்வு பிரிவு தலைமை இயக்குனர் வி.முரளிக்குமார், வருமான வரித்துறை தலைமை கமிஷனர் என்.சங்கரன், கமிஷனர் (நிர்வாகம் மற்றும் வரி விதிப்பு) பழனிவேல்ராஜன் உள்பட ஏராளமான அதிகாரிகள் பங்கேற்றனர்.

வருமானவரித்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து ஜெமினி மேம்பாலம் வரையிலும் சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு, வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களோடு ராணி மேரி அரசு மகளிர் கல்லூரி, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களுடன், ஒருவருக்கொருவர் கைகோர்த்தபடி மனித சங்கிலியாக நின்றனர்.

இதையடுத்து வருமான வரித்துறை கமிஷனர் பழனிவேல்ராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வருமானவரியாக கடந்த ஆண்டு ரூ.8 லட்சத்து 80 ஆயிரம் கோடி நாடு முழுவதும் வசூலிக்கப்பட்டது. நடப்பாண்டு ரூ.9 லட்சத்து 87 ஆயிரம் கோடி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டு ரூ.60 ஆயிரத்து 606 கோடி வரி வசூலிக்கப்பட்டது.

நடப்பாண்டு ரூ.71 ஆயிரத்து 409 கோடி இலக்கு நிர்ணயித்துள்ளோம். முழுமையான வருமானத்தை தெரிவித்து வரி செலுத்தவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) வரி விதிப்பு முறை, தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. வரியின் மூலம் மறைமுகமாகவும், நேரடியாகவும் வரிவசூல் ஆகும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் முழுமையான பலன் மக்களுக்கும், வணிகர்களுக்கும் கிடைக்கும். வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடுகையில், அந்த நாடுகளில் விதிக்கப்படும் வரியின் அளவை விடவும், நம்முடைய நாட்டில் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரி மிதமானது தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com