

கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தின் அருகே உள்ள ரவகோண்ட்லு பெட்டா என்ற மலைப்பகுதியில் அருகிலுள்ள கல்லூரி மாணவர்கள் என்.சி.சி பயிற்சிக்காக முகாமிட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினம் விடுமுறை என்பதால் அருகில் உள்ள ஏரி ஒன்றுக்கு மாணவர்கள் குழுவாக சென்றுள்ளனர்.
ஏரியில் குளித்துக்கொண்டிருந்த போது ஒருவர் தனது மொபைலில் அனைவரையும் செல்பி எடுத்துள்ளார். செல்பி எடுக்கும் நேரத்தில் குளித்துக்கொண்டிருந்த விஷ்வாஸ் என்ற 17 வயது மாணவர் தண்ணீரில் தத்தளித்த படி மூழ்கியுள்ளார். ஆனால், செல்பி எடுக்கும் ஆர்வத்தில் இருந்ததால் அவர் மூழ்குவதை மற்றவர்கள் கவனிக்கவில்லை.
சிறிது நேரம் கழித்து, விஷ்வாஸை காணாததால் நண்பர்கள் அனைவரும் தேடியுள்ளனர். இறுதியில், அவர் சடலமாகத்தான் மீட்கப்பட்டார். இதனையடுத்து, பலியான விஷ்வாஸின் உறவினர்கள் கல்லூரி நிர்வாகத்தின் கவனக்குறைவு காரணமாக தான் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக அவரது சடலத்தை கல்லூரியின் முன்னால் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.