ஆப்கானிஸ்தானில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய புள்ளி சுட்டுக் கொலை

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படை நடத்திய அதிரடி வேட்டையில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய புள்ளி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தாக்குதல்
ஆப்கானிஸ்தான் தாக்குதல்
Published on

காபூல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையே 19 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டகால போர் நடந்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எனினும், இதில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.

ஒருபுறம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோதிலும், மறுபுறம் பயங்கரவாத தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கொல்லப்படும் அவல நிலை தொடருகிறது.

ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் 20 பேர் நேற்று கொல்லப்பட்டனர்.  இதுதவிர 6 பேரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று சிறைபிடித்து வைத்துள்ளனர். அந்நாட்டில் அல் கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் கஜினி மாகாணத்தில் அந்தர் மாவட்டத்தில் நடத்திய அதிரடி வேட்டையில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தில் முக்கிய புள்ளியாக செயல்பட்டு வந்த மொஹிசின் அல்மைஸ்ரி என்பவர் கொல்லப்பட்டுள்ளார்.  இதனை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிவரும் டோலோ நியூஸ் உறுதிப்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com