சென்னையில் 4 மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூடுதல் நகரும் படிக்கட்டுகள்

சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட உள்ளது.
சென்னையில் 4 மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூடுதல் நகரும் படிக்கட்டுகள்
Published on

சென்னை:

அண்ணா சாலையில் உள்ள சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்களில் படிக்கட்டுகள் வழியாகத்தான் பயணிகள் ஏறி, இறங்கி வருகின்றனர். இது பயணிகளுக்கு சற்று சிரமமாக உள்ளது. இதனால் மெட்ரோ ரெயில் நிலையங்களின் நுழைவு வாயில்களில் கூடுதலாக நகரும் படிக்கட்டுகள் அமைக்க சென்னை மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது ஏ.ஜி.-டி.எம்.எஸ். நுழைவு வாயிலில் உள்ள நகரும் படிக்கட்டுகளை அரசு ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதே போல நந்தனம், சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு மற்றும் எல்.ஐ.சி. பகுதிகளிலும், தற்போது நகரும் படிக்கட்டுகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளது.

நந்தனம் ரெயில் நிலையத்தில் வெங்கட்நாராயண ரோடு நுழைவு வாயில் பகுதியில் நகரும் படிக்கட்டுகள் அமைக்க சோதனை பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இந்த இடங்கள் தவிர மேலும் சில இடங்களில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கவும் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

தற்போது அமைக்கப்படும் நகரும் படிக்கட்டுகள் ஆரம்பத்தில் இருந்த ரெயில் நிலையங்களின் வடிவமைப்பின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டு வருகிறது. ஏஜி-டி.எம்.எஸ்., நந்தனம், தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு மற்றும் எல்.ஐ.சி. நிலையங்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையங்களின் நுழைவு வாயில்களில் கூடுதல் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டால் அது மெட்ரோ பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.

ஏ.ஜி-.டி.எம்.எஸ் மெட்ரோ நிலையத்தில் ஒரு நகரும் படிக்கட்டு உள்ளது. அங்கு தற்போது கூடுதலாக ஒரு நகரும் படிக்கட்டு அமைக்கப்பட உள்ளது. விரைவில் சைதாப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி. நிலையங்களில் இரு நுழைவு வாயில்களில் நகரும் படிக்கட்டு அமைக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com