தேனியில் ரஜினியின் உருவ பொம்மையை எரித்த 30 பேர் கைது

தேனியில் ரஜினியின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்திய 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
நடிகர் ரஜினிகாந்தின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களை படத்தில் காணலாம்
நடிகர் ரஜினிகாந்தின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களை படத்தில் காணலாம்
Published on

தேனி:

சென்னையில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது பெரியார் குறித்து அவர் தெரிவித்த சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரஜினிகாந்த்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. தேனியில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து திரையிடப்பட்டுள்ள தர்பார் தியேட்டர் முன்பு ஆதிதமிழர் பேரவை நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.

முன்னதாக அந்த தியேட்டர் முன்பு போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்தனர். போராட்டம் நடத்த வந்தவர்களை போலீசார் பிடித்து அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைக்க கொண்டு சென்றனர்.

அப்போது திடீரென ஆட்டோவில் வந்த மற்றொரு தரப்பினர் ரஜினிகாந்தின் உருவ பொம்மையை சாலையில் வீசி தீ வைத்து எரித்தனர். உடனே போலீசார் அதன் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆதிதமிழர் பேரவை நிர்வாகிகள் சிவா, நீலகனலன், அருந்தமிழன் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com