ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பெண்கள் எக்ஸ்பிரஸ் மோதி பலி

மராட்டிய மாநிலம் தலைநகரான மும்பையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது 3 பெண்கள் ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பெண்கள் எக்ஸ்பிரஸ் மோதி பலி
Published on

மராட்டிய மாநிலம் தலைநகரான மும்பையில் இன்று நண்பகல் 1 மணியளவில் நான்கு பெண்கள் மாலத் மற்றும் காண்டிவாலி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அந்நேரம் மும்பையிலிருந்து மத்தியப்பிரதேசம் செல்லும் பாந்த்ரா-இந்தோர் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. இதை கவனிக்காமல் அப்பெண்கள் வேகமாக தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர்.

சரியான நேரத்தில் கடக்க முடியாததால் வேகமாக வந்த ரெயில் மோதி 4 பெண்களும் தூக்கி எறியப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு போராடிய ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் கண்டறியப்பட வில்லை.

ரெயில் விபத்துகளால் உயிரிழப்பவர்களில் தண்டவாளத்தை கடக்கும் போது பலியானவர்கள் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. ரெயில்வே வாரியம் எத்தகைய நடவடிக்கை எடுத்தாலும் மக்களின் கவனக்குறைவே இது போன்ற விபத்திற்கு காரணமாக அமைகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com