Irugapatru

Irugapatru

கணவன் - மனைவி இடையே நடக்கும் சின்ன சின்ன பிரச்சனை எப்படி பெரியதாக மாறுகிறது என்பது குறித்த கதை.
Published on
Irugapatru(4 / 5)

இறுகப்பற்று

கதைக்களம்

விக்ரம் பிரபுவும், ஸ்ரத்தா ஶ்ரீநாத்தும் தம்பதியினர். மனநல ஆலோசகரான ஸ்ரத்தா ஶ்ரீநாத் விவாகரத்து செய்ய முன்வரும் தம்பதிகளுக்கு அறிவுரை வழங்கி சேர்த்து வைக்கும் பணிகளை செய்கிறார். இவர் தனது கணவர் விக்ரம் பிரபுவிடம் அன்பாக இருக்கிறார். எந்த சண்டையும் வர கூடாது என்று முனைப்போடு இருக்கிறார்.

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் விதார்த், தனது மனைவி அபர்ணதி குண்டாக இருப்பதால் அவரை வெறுக்கிறார். மேலும் அபர்ணதியிடம் விவாகரத்தும் கேட்கிறார். இதனால் அபர்ணதி மனநல ஆலோசகரான ஸ்ரத்தா ஶ்ரீநாத்தை அணுகி தீர்வு கேட்கிறார்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இன்னொரு தம்பதியான ஸ்ரீயும், சானியாவும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கின்றனர். இவர்களும் ஸ்ரத்தா ஶ்ரீநாத்திடம் ஆலோசனை பெறுகிறார்கள். விவாகரத்து செய்யவும் முடிவு செய்கிறார்கள்.

அனைவருக்கும் ஆலோசனை வழங்கி வரும் ஸ்ரத்தா ஶ்ரீநாத்துக்கும் விக்ரம் பிரபுவுக்கும் ஒரு கட்டத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த மூன்று தம்பதியினரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? இவர்கள் பிரச்சனையை எப்படி கையாண்டார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

இதுவரை யாரும் பார்க்காத முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார் விக்ரம் பிரபு. மனைவியின் செயற்கையான அன்பை அறிந்து உடைந்து போகிறவராக கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார்.

மனநல ஆலோசகராக வரும் ஸ்ரத்தா ஸ்ரீநாத், தம்பதிகளிடம் குறைகளை கேட்கும் விதம், தீர்வு சொல்லும் பாங்கு, தன்னை விட்டு கணவர் பிரிந்து விடுவாரோ என்கிற தவிப்பு என்று அபாரமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

விதார்த்துக்கு நடிப்பு திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். குறிப்பாக ஸ்ரத்தாவிடம் தன்னுடைய இயலாமையை கூறும்போது பார்ப்பவர்களையும் கலங்கடித்து விடுகிறார்.

அபர்ணதி வெகுளித்தனமான நடிப்பால் மனதில் நிற்கிறார். கணவனுக்காக உடலை குறைத்து உருமாறி ஆச்சரியப்படுத்தவும் செய்கிறார். எந்த கதாநாயகியும் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் துணிச்சலுடன் நடித்து பாராட்டை பெற்று இருக்கிறார்.

காதல் மனைவியுடன் அடிக்கடி சண்டைபோடும் ஶ்ரீ, ஒரு கட்டத்தில் என்ன பிரச்சனை என்பதை புரிந்து கொண்டவுடன் உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முதிர்ச்சியான நடிப்பை கொடுத்து இருக்கிறார் சானியா.

இயக்கம்

கணவன் மனைவி இடையே நடக்கும் சின்ன சின்ன பிரச்சனை எப்படி பெரியதாக மாறுகிறது, அதற்கான தீர்வு என்ன என்பதை அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் யுவராஜ் தயாளன். ஆரம்பத்தில் மெதுவாக நகரும் திரைக்கதை சில நிமிடங்களிலேயே நம்மை கதைக்குள் அழைத்து சென்று விடுகிறது. படம் பார்க்கும் அனைவருக்கும் நம் வாழ்வில் நடந்த சம்பவம் என்று நினைத்து பார்க்கும் அளவிற்கு படத்தை கொடுத்து இருக்கிறார். பிரச்சனையை எப்படி கையாள்வது என்பதையும் சொல்லி இருக்கிறார்.

இசை

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் கதையோடு பயணிக்கிறது. பின்னணி இசையும் சிறப்பாக உள்ளது.

ஒளிப்பதிவு

கோகுல் பெனாய்யின் ஒளிப்பதிவு பல காட்சிகள் அழகாக உள்ளது.

படத்தொகுப்பு

ஜே.வி.மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு அருமை.

காஸ்டியூம்

பி. செல்வம் காஸ்டியூம் டிசைனில் கதாபாத்திரங்கள் பளிச்சிடுகின்றனர்.

புரொடக்‌ஷன்

பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் ‘இறுகப்பற்று’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.

வீடியோக்கள்

இறுகப்பற்று

X

Maalai Malar
www.maalaimalar.com