நூலிழையில் பதக்கத்தை தவறவிட்ட இந்தியர்கள்

நூலிழையில் 7 வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டனர்.மனு பாக்கர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டு 4-வது இடத்தை பிடித்தார்.
நூலிழையில் பதக்கத்தை தவறவிட்ட இந்தியர்கள்
Published on

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

10 நாள் போட்டி முடிவில் இந்தியா 3 வெண்கல பதக்கமே பெற்றுள்ளது. கடந்த 28-ந் தேதி பெண்கள் 10 மீட்டர் ஏர்பிஸ்டலில் மனு பாக்கர் வெண்கல பதக்கம் பெற்று பதக்க எண்ணிக்கையை தொடங்கி வைத்தார். 30-ந் தேதி அவர் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் 2-வது பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.

கடந்த 1-ந் தேதி ஸ்வப்னில் குசாலே பதக்கத்தை பெற்றார். ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலையில் இந்த பதக்கம் கிடைத்தது. அதன் பிறகு பல போட்டிகளில் நெருங்கி வந்து இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கத்தை நழுவவிட்டது. மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. நூலிழையில் 7 வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டனர்.

வில்வித்தை கலப்பு அணிகள் பிரிவில் தீரஜ்-அங்கீதா ஜோடி வெண்கலப் பதக்கத்தை தவற விட்டு 4-வது இடத்தை பிடித்தது. அதை தொடர்ந்து 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் அர்ஜூன் பபுதா வெண்கலத்தை நழுவ விட்டு 4-வது இடத்தை பிடித்தார்.

3-வது பதக்கத்தை பெறுவார் என்று எதிர் பார்க்கப்பட்ட மனு பாக்கர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டு 4-வது இடத்தை பிடித்தார்.

குத்துச்சண்டை போட்டியில் நிஷாந்த் தேவ் (75 கிலோ பிரிவு), லவ்லினா (75 கிலோ பிரிவு) கால் இறுதியில் தோற்று வெண்கலப் பதக்கத்தை நழுவ விட்டார்.

பேட்மின்டனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்ஷயா சென் அரை இறுதியில் தோற்றார். நேற்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் வெற்றி பெறுவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. அதிலும் தோற்று வெண்கலத்தை பெறும் வாய்ப்பை இழந்தார்.

ஸ்கீட் கலப்பு அணிகள பிரிவில் மகேஸ்வரி சவுகான்-ஆனந்த் ஜித் சிங் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தோற்று 4-வது இடத்தை பிடித்தார்.

நீரஜ் சோப்ரா மற்றும் இந்திய ஆக்கி அணியினர் மட்டுமே தற்போது எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

இதற்கு முந்தைய போட்டிகளில் 1960 ரோம் ஒலிம்பிக்கில் மில்கா சிங் (400 மீட்டர் ஓட்டம்), 1984 சியோல் ஒலிம்பிக்கில் பி.டி.உஷா (400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம்), 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் குஞ்சராணி தேவி (பளு தூக்குதல்), லியாண்டர் பெயஸ்-மகேஷ் பூபதி ( டென்னிஸ் இரட்டையர்) ஜோடி ஆகியோர் 4-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை தவற விட்டு இருந்தனர்.

அணிகள் பிரிவில் 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்கில் இந்திய கால்பந்து அணியும், 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஆக்கி அணியும் 4-வது இடத்தை பிடித்து இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com