search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    பெண்கள் ஆன்லைனில் ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்கும்போது கவனிக்க வேண்டியவை...
    X

    பெண்கள் ஆன்லைனில் ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்கும்போது கவனிக்க வேண்டியவை...

    • ஆன்லைனில் பாலிசி வாங்குவது மிகவும் எளிதானது.
    • சில நேரங்களில் சிக்கலானதாக மாறலாம்.

    ஆயுள் காப்பீடு எவ்வளவு அவசியம் என்பது கடந்த காலங்களைவிட இப்போது அதிகமாகவே உணரப்பட்டிருக்கிறது.

    ஆயுள் காப்பீடு சார்ந்த திட்டங்களில் இப்போதுதான் வளர்ந்துவரும் பாலிசியாக 'டேர்ம் இன்சூரன்ஸ்' இருக்கிறது. குறைவான பிரீமியம் செலுத்தினால் போதும். அதிக கவரேஜ் கிடைக்கும். பாலிசிதாரருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் மட்டுமே கிளைம் செய்து கொள்ள முடியும். அப்படி இல்லை என்றால் பாலிசி முடிவில் முதிர்வு தொகை எதுவும் கிடைக்காது. அதாவது பாலிசிக்கு கட்டிய பிரீமியம் தொகை திரும்பக் கிடைக்காது. பொதுவாக ஒருவரது ஆண்டு வருமானத்தைப்போல 15 மடங்கு தொகைக்கு டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும், என்கிறார்கள்.

    இதில் டேர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களை சமீப காலங்களில் ஆன்லைன் மூலமாக எடுப்பது அதிகரித்து வருகிறது. முகவர் மூலம் எடுக்கப்படும் பாலிசியைவிட ஆன்லைன் மூலம் எடுக்கப்படும் பாலிசிக்கான பிரீமியம் கணிசமாகக் குறைகிறது. ஆன்லைனில் பாலிசி வாங்குவது மிகவும் எளிதானது. ஆனால் சில நேரங்களில் சிக்கலானதாக மாறலாம். முகவரிடம் நேரடியாக விளக்கிச் சொல்லும் விஷயங்களை ஆன்லைனில் விளக்க முடியாது. ஆன்லைன் பாலிசி விண்ணப்பத்தை நாம் நிரப்பும்போது தவறுகள் நடக்கவும் வாய்ப்பு உள்ளது. சில உண்மைகளை மறைக்கவோ அல்லது தெரியாமலேயேகூட விட்டு விடலாம். பாலிசி எடுக்கும்போது நம்மைப் பற்றிய விவரங்களை தெளிவாகக் குறிப்பிட்டால்தான் கிளைம் செய்வதில் சிக்கல் இருக்காது.

    காப்பீடு பாலிசி எடுக்கும்போது சில நேரங்களில் மருத்துவ பரிசோதனைகள் அவசியமாக இருக்கும். முகவர் மூலம் எடுக்கும்போது உங்களுக்கு மருத்துவ பரிசோதனை தேவையா என்பதை சொல்லிவிடுவார். ஆன்லைன் மூலம் பாலிசி எடுக்கும்போது இந்த விவரங்களைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு குறைவு. மேலும் மருத்துவப் பரிசோதனை தேவையாக இருந்தால் எந்த மருத்துவமனையில் எப்போது பரிசோதனை? என்பது போன்ற விவரங்களை திரும்பவும் கேட்டுத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.

    ஆனால் முகவர் மூலம் எடுக்கிற போது இந்த தகவல்கள் எளிதாக கிடைத்து விடும். ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து, பாலிசிக்குரிய பிரீமியம் கட்டி விடுவோம். பிறகு மருத்துவப் பரிசோதனை முடிவுகள் கிடைத்ததும் அதன் அடிப்படையில் பிரீமியம் அதிகரிக்கப்படலாம். அதிக கவனம் தேவைப்படும் பணியில் இருப்பவர்கள் மற்றும் ஆபத்தான பணியில் இருப்பவர்களுக்கு பிரீமியம் அதிகமாக இருக்கும். பிரீமியத்தை குறைக்க பொய் சொன்னால் பின்னால் கிளைம் செய்யும் போது சிக்கல் வந்துவிடும் என்று இத்துறையை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

    Next Story
    ×