மாதவிடாய் நிரந்தரமாக நிற்க போவதற்கான அறிகுறிகள்

பெண் ஹார்மோன்கள் உற்பத்தி குறைய, குறைய மாதவிடாய் சுழற்சி மாறுதல்கள் ஏற்படும். மாதவிடாய் நிரந்தரமாக நிற்க போவதற்கான அறிகுறிகளை அறிந்து கொள்ளலாம்.
மாதவிடாய் நிரந்தரமாக நிற்க போவதற்கான அறிகுறிகள்
Published on

ஏனைய பெண்களுக்கு இந்த மாற்றங்கள் தீவிரமாக இருக்கும். இதனால் அறியாமையால் பெண்களுக்கு பயமும் பீதியும் உண்டாகி பல தொல்லைகளை சந்திக்க நேரிடும். எனவே, இதைப்பற்றி அறிந்துக் கொண்டு, தவிர்க்க முடியாத இந்த இயற்கையின் நியதியுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

அறிகுறிகள்

* மெனோபாஸ் நெருங்க நெருங்க உங்கள் மாதவிடாய் சுழற்சி ஒரே ரீதியாக இல்லாமல் மாறுபடும். வழக்கத்தை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உதிரபோக்கு உண்டாகலாம்.

* இரண்டு மாதவிலக்கின் நடுவில் உள்ள நாட்கள் குறையலாம், அல்லது கூடலாம்.

* இல்லாவிட்டால் வழக்கமான முறையான மாதவிடாய் சுழற்சி தொடர்ந்து, திடீரென்று எவ்வித அறிகுறியுமின்றி நின்று விடலாம்.

* வழக்கத்துக்கு மாறாக அதிக உதிரப்போக்கு ஏற்பட்டால் உங்கள் டாக்டரை நாடவும்.

1. வேதனையான சூடு உணர்வுகள் உடம்பில் உண்டாகி, முகம் சிவந்து, முகத்தில் கழுத்தில் உடலில் வேர்வை ஏற்படும். படபடப்பு, தலை சுற்றல் இல்லை… மயக்கமே ஏற்படலாம். இது சில நிமிடங்களில் மறையலாம், இல்லை மணிக்கணக்கில் இருந்து தொல்லை தரலாம். ஒன்றிரண்டு வருடங்கள் இல்லை 5 வருடங்கள் கூட இது தொடரலாம்.

இதற்கு நிவாரணம் - ‘ஜில்’ என்று குளிர்ந்த பழரசங்கள் அல்லது தண்ணீரை பருகவும். இரவில் எப்போதும் கிடைக்குமாறு, படுக்கை அருகில் பழரசங்கள்/தண்ணீர் இவற்றை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

2. இரவில் அதிக வியர்வை ஏற்பட்டு உங்கள் தூக்கம் தடைப்படும். நடுஇரவில் நீங்கள் எழுந்து உடைகளை மாற்றவோ இல்லை ‘ஷவரில்’ குளிக்கவோ நேரிடும். இதனால் உங்கள் தூக்கமும் உங்கள் துணைவரின் தூக்கமும் கெடும்.

3. யோனியின் ‘சுவர்கள்’ தங்கள் மென்மையையும், ‘எலாஸ்டிக்’ தன்மையையும் இழந்து விடும். நமைச்சல், சொறி ஏற்பட்டு, யோனியில் தொற்று நோய் உண்டாகலாம். சாதாரணமாக உடல் உறவின்போது, யோனியை ஈரமாக வைக்க சுரக்கும் திரவம், இந்த  சமயத்தில், சரிவர சுரக்காது. இதனால் யோனி காய்ந்து விடும் உடல்உறவு மகிழ்ச்சியை விட அதிக வேதனையை உண்டாக்கும். எனவே, உடலுறவை தவிர்க்கவும்.

4. தலைவலி, உடல்வலி, களைப்பு, வயிற்று தொல்லைகள், மார்பகம் மென்மையடைதல், தூக்கமின்மை, எடை கூடுதல் இவையெல்லாம் உண்டாகும். தோல்கள் சுருக்கமடைந்து ‘கோடுகள்’உண்டாகும். தலை முடி அதன் பளபளப்பை இழக்கும். முகத்தில் உள்ள முடிகள் முரடாகி அதிகரிக்க கூடும். தலைமுடி உதிர்ந்து குறைந்து விடலாம். ஆஸ்டியோ – போரேசிஸ் என்ற எலும்பு நோய் தோன்றலாம்.

5. உடல் தொல்லைகளால் எரிச்சலும் களைப்பும் ஏற்படும். அடிக்கடி எரிந்து விழுவீர்கள். மறதி, அடிக்கடி மனநிலை மாறுவது, ஒரு விஷயத்தில் ஈடுபாடு இல்லாமல் போவது,  இனந்தெரியாத பலஉணர்வுகள் காரணமில்லாமல் அழுகை இவையெல்லாம் ஏற்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com