search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    தண்டை அணியும் பாரம்பரியத்தின் வரலாறு
    X

    'தண்டை' அணியும் பாரம்பரியத்தின் வரலாறு

    • இந்தியாவில் கால்களில் ஆபரணங்கள் அணிவது ஆன்மிக ரீதியிலும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
    • பழங்கால பெண்கள், தடிமனான தண்டை, கால் காப்பு போன்றவற்றை அணிந்திருந்தனர்.

    தண்டை, சலங்கை, கொலுசு போன்றவை கால்களின் கணுக்கால் பகுதியில் அணியப்படும் அணிகலன்கள் ஆகும். இவை அளவிலும் பயன்பாட்டிலும் சற்று மாறுபடும். தண்டை தடிமனாக இருக்கும். இது 'சிலம்பு' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சிலம்பை மையமாக வைத்தே, 'சிலப்பதிகாரம்' எனும் தமிழ் இலக்கியம் உருவாக்கப்பட்டது.

    உலக அளவில் இதன் வரலாற்றை பார்க்கும் போது, மெசபடோமியாவில் வாழ்ந்த சுமேரியர்கள் சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே 'தண்டை' போன்ற அணிகலன்களை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. பழங்கால எகிப்தியர்களும், கணுக்காலில் ஆபரணங்கள் அணிந்திருந்ததாக குறிப்பு உள்ளது. செல்வந்தர்கள் தங்கள் செல்வ செழிப்பை காட்டுவதற்காக, தண்டையில் விலை உயர்ந்த கற்களைப் பதித்து அணிந்திருந்தார்களாம்.

    பழங்காலத்திலே, மத்திய கிழக்கு நாடுகளில் வசித்த பெண்கள், தங்கள் கால்கள் இரண்டிலும் அணிகலன்கள் அணிந்து, அதனை ஒரு சங்கிலியால் இணைத்துக் கொண்டு நடந்தார்களாம். கால்களை அகற்றி நடக்காமல், குறுகிய அடிகள் எடுத்து வைத்து நடப்பதற்கான பயிற்சியாக இது மேற்கொள்ளப்பட்டது.

    இந்தியாவில் கால்களில் ஆபரணங்கள் அணிவது ஆன்மிக ரீதியிலும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. கால்களில் அணியும் அணிகலன்கள் வெள்ளியால் செய்யப்பட்டவை. வெள்ளி குளிர்ச்சி தரும் உலோகமாகும். இதனால் ஆயுள் விருத்தியாகும் என்கிறது ஆயுர்வேதம். பண்டைய காலத்தில் திருமணமான பெண்கள் மட்டுமே காலில் சலங்கை கொண்ட ஆபரணங்கள் அணிந்தனர். இதன்மூலம் ஒரு பெண் திருமணமானவரா, ஆகாதவரா என்பதை அணிகலன் எழுப்பும் சத்தத்திலே அறிந்து கொண்டனர்.

    தண்டையானது ஈயம் மற்றும் தாமிரத்தால் செய்யப்படுகிறது. ஈயம் மற்றும் தாமிரம் இரண்டையும் முறுக்கி செய்வதால் 'முறுக்கு தண்டாய்' எனவும் அழைக்கப்படுகிறது. தண்டை, குழந்தைகளின் கால் நரம்புகளை பலப்படுத்துகிறது. பழங்கால பெண்கள், தடிமனான தண்டை, கால் காப்பு போன்றவற்றை அணிந்திருந்தனர்.

    தண்டை அணியும் முறை மலைவாழ் மக்களின் கலாசாரத்தில் இன்றும் உள்ளது. கர்ப்பிணி பெண்கள் தண்டை அணிவதன் மூலம் கர்ப்பப்பை இறக்க பிரச்சினையை தீர்க்கலாம். மேலும் இது கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளின் செயல் திறனையும் தூண்டிவிடுகிறது.

    குதிகால் நரம்பினைத் தண்டை தொட்டுக் கொண்டிருப்பதால், இந்த நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. இதனால் கோபம் மற்றும் உணர்ச்சி வசப்படுதலை குறைக்க முடியும்.

    Next Story
    ×