search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    வீட்டிலேயே செய்யக்கூடிய சருமத்தை பாதுகாக்கும் பேஸ் பேக்குகள்...
    X

    வீட்டிலேயே செய்யக்கூடிய சருமத்தை பாதுகாக்கும் பேஸ் பேக்குகள்...

    • அழகு நிலையம் சென்றால் நிறைய பணம் செலவாகும்.
    • பெண்கள் தங்கள் சரும அழகை மற்றும் நிறத்தை மேம்படுத்த இயற்கை வழிகளை நாடுகிறார்கள்.

    ஒவ்வொருவருமே தங்களின் சரும நிறத்தை மேம்படுத்த முயற்சிப்போம். அதற்காக நிறைய பேர் அழகு நிலையங்களுக்குச் சென்று பேஸ் பேக், ப்ளீச்சிங், ஸ்க்ரப் என்று பலவற்றை மேற்கொள்வதுண்டு. அழகு நிலையம் சென்றால் அங்கு நிறைய பணம் செலவாகும். எனவே அனைவராலும் அழகு நிலையங்களுக்கு செல்ல முடியாது. இது தவிர தற்போது அலுவலகத்தில் உள்ள வேலைப்பளுவால் நிறைய பேருக்கு அழகு நிலையம் செல்வதற்கு நேரம் கிடைப்பதில்லை.

    இதனால் நிறைய பெண்கள் தங்கள் சரும அழகை மற்றும் நிறத்தை மேம்படுத்த இயற்கை வழிகளை நாடுகிறார்கள். குறிப்பாக வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே சருமத்திற்கு பேஸ் பேக் போட விரும்புகிறார்கள். சரும நிறத்தை அதிகரிக்கும், பாதுகாக்கும் நிறைய பொருட்கள் நமது வீட்டில் உள்ளன. குறிப்பாக நாம் சாப்பிடும் பொருட்களை கொண்டே நமது சரும நிறத்தை அதிகரிக்கும், பாதுகாக்கும் பேஸ் பேக்குகளைப் போடலாம்.

    வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யக்கூடிய சருமத்தைப் பாதுகாக்கும் பேஸ்பேக்குகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

    * பாதி எலுமிச்சைப் பழத்தின் சாறு, அரை வெள்ளரிக்காய் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் பச்சைப் பயறு மாவு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அதை முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவலாம்.

    பலன்கள்: எண்ணெய்ப் பசை நீங்கி, முகம் பளபளக்கும். பருக்கள் நீங்கும். முகம் பளபளப்புடன் காணப்படும்.

    * ஒரு முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் கற்றாழை (Aloe vera) ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அடித்துக்கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் ஊறியதும், வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

    பலன்கள்: இந்த மாஸ்க்கை முகத்தில் பூசுவதால், வறண்ட தன்மை நீங்கி முகத்துக்குப் பொலிவு கிடைக்கும். இது சருமத்தில் காணப்படும் அதிகப்படியான வறண்ட தன்மையை உறிஞ்சுவதோடு அழுக்கையும் அகற்றும்.

    * இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப்பால், ஒரு டேபிள்ஸ்பூன் பச்சைப் பயறு மற்றும் ஒரு பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றைச் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். பிறகு இந்தக் கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

    பலன்கள்: நேச்சுரல் மாய்ஸ்ச்சரைசர் தரும் பேக் இது. மிருதுவாக, மென்மையாகச் சருமம் மாறும். சூரியக் கதிர்களால் பாதித்த சருமத்துக்கு மிகவும் நல்லது.

    * ஒரு டேபிள்ஸ்பூன் தயிரை, ஒரு டீஸ்பூன் மைதா மாவுடன் நன்கு கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்துத் தண்ணீரில் முகத்தைக் கழுவலாம்.

    பலன்கள்: இந்த வகை ஃபேஸ்பேக் வறண்ட மற்றும் எண்ணெய் சருமத்தினருக்கு ஏற்றது. சருமம் மிருதுவாகும். பளிச்சென்று சருமம் மாறும். இன்ஸ்டன்ட் பொலிவு பெற இந்த பேஸ் பேக் பெஸ்ட் சாய்ஸ்.

    * ஒரு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு பெரிய பழுத்த தக்காளி பழம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவலாம்.

    பலன்கள்: முகம் பளிச்சென மாறும். சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும். எண்ணெய் பசையை நீக்கும். சிறந்த டோனராகச் செயல்படும். இயற்கையாகவே பளபளப்பான சருமம் பெற உதவும்.

    * ஒரு கப் பழுத்த பப்பாளி, ஒரு கப் பழுத்த வாழைப்பழம், ஒரு டேபிள்ஸ்பூன் பால் பவுடர் ஆகியவற்றைத் தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும். இந்த விழுதை முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்துத் தண்ணீரால் முகத்தைக் கழுவலாம்.

    பலன்கள்: சருமம் புத்துணர்வாகும். ஈரப்பதத்துடன், மென்மையாகவும் இளமையாகவும் காணப்படும். இந்த வகை ஃபேஸ் பேக்கை அடிக்கடி முகத்தில் பூசி வந்தால் தோலில் காணப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.

    * ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி மாவு, ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல், ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாற்றைக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவலாம்.

    பலன்கள்: முகம் பளிச்சென மாறும். இந்த பேக்கை வாரத்தில் நான்கு முறை தொடர்ந்து பூசினால் முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகள் மறையும்.

    Next Story
    ×