நெய் வகைகளும்... அவற்றின் நன்மைகளும்...
இன்றைக்கு இந்தியாவில் பெருமளவில் பாலுக்காக வளர்க்கப்படும் பசுக்கள் கலப்பின வகையை சேர்ந்தவை ஆகும். இவை அதிக அளவில் பால் தருவதால் வணிக ரீதியாக விரும்பி வளர்க்கப்படுகின்றன. இந்த பசுக்கள் தரும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய் ஏ-1 வகை என்று அழைக்கப்படுகிறது. அதே வேளையில், பாரம்பரிய நாட்டு பசு இனங்கள் குறைவாகவே பால் தருகின்றன. இந்த பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய் ஏ-2 வகை என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஏ-2 வகை நெய் இன்றைக்கு உலகின் பல நாடுகளில் விரும்பி வாங்கப்படுகிறது. இதற்கு காரணம், நாட்டு பசுக்களின் நெய் பீட்டா-கேசின் என்ற புரதத்தை கொண்டுள்ளது. இது சாதாரண கலப்பின பசுக்கள் தரும் ஏ-1 வகை நெய்யை விட ருசியானது. பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக, சித்தா, ஆயுர்வேத மருத்துவத்திலும் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
ஏ-2 வகை நெய்யில் உள்ள ஒருவித அமிலம் குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது, குடலின் இயக்கத்தை சீராக்குகிறது. மேலும், இதில் வைட்டமின்-ஏ, டி, இ, கே மற்றும் ஒமேகா-3 கொழுப்புகள் உள்ளன. இதனால், உடலை வலுப்படுத்தும். மேலும், உடலில் தோல் அழகை மெருகேற்றி முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது.
ஏ-2 வகை நெய் என்பது உடலில் நோய்க்கு காரணமாக கருதப்படும் வாத, பித்த, கபத்தை சமநிலைப்படுத்தி குணப்படுத்தும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. இந்த நெய் பல்வேறு நன்மைகளை அளித்தாலும், அளவுக்கு அதிகமாக உண்ணக்கூடாது என்றும் கூறப்படுகிறது.

