search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    அற்புதம் நிறைந்த ஆவாரம்பூ
    X

    அற்புதம் நிறைந்த ஆவாரம்பூ

    • ஆவாரம்பூவின் மருத்துவ குணங்களை அறியலாம்.
    • ஆவாரம்பூ குடிநீர் தயாரித்து அருந்த நாவறட்சி நீங்கும்.

    பொதுவாக கிராமப்புறங்களில் ஆவாரம் பூவை அதிகம் பயன்படுத்துகின்றனர். தைப்பொங்கல் கொண்டாட்டத்தின்போது காப்புக்கட்டுவதற்கும், மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளுக்கு மாலை கட்டுவதற்கும், வீடுகளுக்குத் தோரணம் கட்டுவதற்கும் ஆவாரம் பூவை பயன்படுத்துகின்றனர்.

    சங்க காலத்தில் `மடல் மா' ஏறி வருகையில் பயன்படுத்தப்பட்டது. குறிஞ்சிப்பாட்டில் தொகுக்கப்பட்டுள்ள 99 வகையான மலர்களில் ஒன்றாக இது குறிப்பிடப்பட்டுள்ளது.

    "ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ' என்ற பழமொழியில் இருந்து ஆவாரம்பூவின் மருத்துவ குணங்களை அறியலாம். பொன் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் ஆவாரை தரிசு நிலங்களிலும் வயல் வரப்புகளிலும் மிகக் கடுமையான வறட்சியையும் தாங்கி தன்னிச்சையாக வளரக்கூடியது. ஆவாரையின் பூ, காய், பட்டை, வேர், இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து "ஆவாரைப் பஞ்சாங்கம்" என்று அழைக்கப்படுகிறது.

    மருத்துவ குணங்கள்

    * ஆவாரைப் பஞ்சாங்கத்தை தினம் ஒரு மேசைக்கரண்டி அளவு எடுத்து வாயில் போட்டு வெண்ணீர் பருகிவர நீரிழிவு (சர்க்கரை) நோய், உடல் சோர்வு, நாவறட்சி, தூக்கம் இன்மை ஆகியவை நீங்கும்.

    * ஆவாரம் பூ, இலையின் கொழுந்தை சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து அதில் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கஷாயம் இறக்கி பால் சேர்த்து பருகிவந்தால் நீரிழிவு நோய் படிப்படியாக குறையும்.

    * சிலருக்கு உடலில் துர் நாற்றம் வீசும். அவர்கள் ஆவாரம் பூவை உணவில் சேர்த்துக்கொள்ள உடல் துர்நாற்றம் நீங்கும்.

    * ஆவாரம் பூவுடன் ஊறவைத்த பாசிப்பயறு சேர்த்து அரைத்து குளித்தால் நமைச்சல் துர்நாற்றம் நீங்கும்.

    * உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள் ஆவாரம் பூ கஷாயம் தவறாமல் குடித்து வர சூடு தணிந்து குளுமை அடையும்.

    * ஆவாரம் பூவை ஊறவைத்து குடிநீர் தயாரித்து அருந்த நாவறட்சி நீங்கும்.

    * சிலருக்கு உடல் சூட்டினால் கண் சிவந்து விடும். அவர்கள் ஆவாரம் பூவை உலர்த்திப் பொடி செய்து, நீர் விட்டு அரைத்துக் குழப்பிப் படுக்கும் முன் கண் புருவத்தின் மீது பற்றுப் போட கண்களின் சிவப்பு மாறும்.

    * ஆவாரம் பூக்களை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிட சர்க்கரை நோயின் தாக்கம் குறையும்.

    ஆவாரம் பூ பொடி

    ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து, அதனுடன் அதே அளவு அருகம்புல்லை வேருடன் சேகரித்து சுத்தம் செய்து இடித்து சூரணம் செய்து, இரண்டு தூளையும் ஒன்றாய் கலந்து ஒரு பாட்டிலில் போட்டு வைக்க வேண்டும். தினமும் காலை, மாலை, அரைத் தேக்கரண்டி அளவு பசு நெய் சேர்த்துக் குழைத்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமடையும்.

    Next Story
    ×