search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    எலும்பு தேய்மானம் எதனால் ஏற்படுகிறது...?
    X

    எலும்பு தேய்மானம் எதனால் ஏற்படுகிறது...?

    • எலும்பு தேய்மானம் பொதுவாக 40 வயதிற்கு மேல் ஏற்படுகிறது.
    • அன்றாட பயன்பாட்டினால் ஏற்படும் இயற்கையான சேதமாகும்.

    பொதுவாக ஒருவருக்கு எலும்பு தேய்மானம் இருக்கும் பட்சத்தில் இடுப்பு, தோள், மணிக்கட்டு, முட்டி, முதுகு, கழுத்து உள்ளிட்டவற்றில் திடீரென வலி ஏற்படும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. பரம்பரைக் காரணங்கள், கால்சியம் குறைபாடு, உடற்பயிற்சி இன்றி இருத்தல், எடை அதிகம் இருத்தல், மதுப்பழக்கம் மற்றும் புகைபிடித்தல், வேறு நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகள், முன் கூட்டியே ஏற்படும் மெனோபாஸ், பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கருப்பை அகற்றுதல் போன்ற காரணங்களால் எலும்பு தேய்மானம் உண்டாகிறது.

    எலும்பு தேய்மானம் பொதுவாக 40 வயதிற்கு மேல் ஏற்படுகிறது. இது அன்றாட பயன்பாட்டினால் ஏற்படும் இயற்கையான சேதமாகும். ஒவ்வொருவரின் உடலமைப்பின் தனித்தன்மையின் படியும், மூட்டுகளை பயன்படுத்தும் முறைகளை பொறுத்தும் மாறுபடும்.

    உதாரணத்திற்கு மூட்டு எலும்பின் அடர்த்தி மற்றும் கனிமச்சத்து குறைவாக இருப்பவர்களுக்கும் உடற்பருமன், சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கும் கரடுமுரடான பாதைகளில் அதிகமாக நடப்பவர்களுக்கும் மூட்டு தேய்வு அதிகமாக ஏற்படுகிறது.

    தடுக்கும் முறைகள்:

    1) உடற்பருமனை குறைக்க வேண்டும்.

    2) புரதச்சத்து மற்றும் கனிமச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 3) கரடுமுரடான பாதைகளில் நடப்பதையும், படிகளில் அடிக்கடி ஏறி இறங்குவதையும் தவிர்க்க வேண்டும்.

    4) உபநோய்கள் (அதிக உடற்பருமன் மற்றும் சர்க்கரை நோய்) இருப்பவர்கள் அதற்கான சிகிச்சையை முறையாக எடுக்க வேண்டும்.

    5) அன்றாட பழக்க வழக்கங்களில் மூட்டுகளை மடக்கி உட்காராமல் நாற்காலியில் உட்கார வேண்டும். மேற்கத்திய கழிவறை முறையை உபயோகிக்க வேண்டும்.

    பொதுவாக, 13 வயதில் ஒரு பெண் குழந்தை, பூப்பெய்தும் பருவத்தில், சிகப்பரிசி, கேழ்வரகு புட்டு , எள் உருண்டை, கருப்பட்டி, நல்லெண்ணெய், உளுந்தங்களி, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு போன்றவற்றை கொடுக்கத் தொடங்க வேண்டும். இதை தினமும் கொடுக்க முடியவில்லை என்றாலும், மாதவிடாய் நேரத்திலாவது, நான்கு நாள்களுக்கு தொடர்ந்து கொடுத்து வருவது நல்லது.

    இதே வயதில்தான், ஆண்பிள்ளைகளும் அடுத்தக்கட்டத்தை நோக்கி வளர்ச்சி அடைய தொடங்குகிறார்கள். எனவே, அந்த வயதிலிருந்தே அவர்களுக்கும் இந்த உணவுளை எல்லாம் கொடுக்கத் தொடங்கினால், அவர்களும் உடலில் எந்த பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பார்கள். பெரும்பாலானவர்கள், மூட்டுவலி என்றதுமே வலி மாத்திரைகள் எடுத்துக் கொள்ள தொடங்குகிறார்கள்.

    அப்படியில்லாமல், காலை எழுந்தவுடன், இஞ்சி, சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து கொதிக்க வைத்த நீரை காலை, மாலை இரு வேளை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அல்லது காலை டீ குடித்தால், மாலை வேளையில் காய்களுடன் இஞ்சி, சீரகம், மிளகு எல்லாம் சேர்த்து ஒரு சூப் மாதிரி செய்து குடித்து வரலாம். அடுத்து கேழ்வரகு சார்ந்த உணவுகள், களியாகவோ, முருங்கைக்கீரை சேர்த்து அடையாகவோ, புட்டாகவோ, கஞ்சியாகவோ, தோசையாகவோ செய்து காலை வேளையில் சாப்பிட்டு வரலாம்.

    தோசைக்கு மாவு அரைக்கும்போது, சிகப்பரிசியும் சேர்த்து தோசை மாவு தயாரித்து அதில், இட்லியாகவோ, தோசையாகவோ செய்து சாப்பிட்டு வரலாம். சிகப்பரிசி அவல் அதிகளவு சேர்த்துக் கொள்ளலாம். அதுபோன்று எள்ளு சேர்த்த உணவுகள், கொள்ளு வேக வைத்து சுண்டலாக செய்து சாப்பிடுவது, அல்லது எள்ளு, கொள்ளு, உளுந்து, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து ஒரு பொடியாக திரித்து வைத்துக் கொண்டு, சாதத்தில் போட்டு சாப்பிடுவது, இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடுவது போன்றவற்றை செய்யலாம்.

    பச்சைபயறை முளைக்கட்டியோ, வேக வைத்தோ, கூட்டு வைத்தோ செய்து சாப்பிட்டு வரலாம். வெந்தயம், சீரகம், தனியா வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, சாம்பார், கோதுமை தோசை, ராகி அடை செய்யும்போது சிறிது தூவி சாப்பிட்டு வரலாம்.

    மிளகு அதிகளவில் சேர்த்துக் கொள்ளலாம். சாமை, வரகு, தினை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். பாதாம் ஊற வைத்து தோல் நீக்கிவிட்டு சாப்பிடுவது நல்லது. பால் சார்ந்த உணவுகளான மோர், தயிர் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

    கால்சியம் மாத்திரைகள் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, ரத்தக்குழாய் திக்காவது அல்லது ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவது அல்லது குதிகாலில் கூடுதலாக எலும்பு வளர்வது போன்றவை ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. எனவே, முடிந்தளவு மாத்திரைகளை தவிர்த்துவிட்டு, உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது அவை பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது.

    அதேபோன்று கால்சியம் சத்துடன் கண்டிப்பாக, வைட்டமின் டி சத்தும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் டி சத்து சூரிய ஒளியில் அதிகளவு இருக்கிறது. அது கிடைக்க, காலை 9 மணிக்குள் அல்லது மாலை 3-5- க்குள் சிறிதுநேரம் வெயில்படும்படி 20 நிமிடம் நிற்பது நல்லது. இப்படி வெயிலில் நிற்பதற்கு முன்பு, சிறிதளவு தண்ணீர் குடித்துவிட்டு போய் நிற்பது மேலும் சிறந்தது.

    பச்சை காய்கறிகள், பிரண்டை, முடக்கற்றான் இவையெல்லாம் வாரத்திற்கு 2 நாள்கள் சேர்த்து வருவது மிகவும் நல்லது. இது இரண்டும் முடக்குவாதத்திற்கு நல்ல நிவாரணம் தரும். முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை, பசலைக்கீரை போன்றவற்றையும் அதிகம் சாப்பிட்டு வரலாம். இதைத் தொடர்ந்து எடுத்து வரும்போது, மேற்கொண்டு எலும்பு தேய்மானம் ஆவது தடுக்கப்படும். மூட்டுகளுக்கும் பலம் கிடைத்து வலி குறையும்.

    Next Story
    ×