search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    சர்க்கரை நோய்க்கு சித்த மருத்துவத்தில் சிறப்பு சிகிச்சை
    X

    சர்க்கரை நோய்க்கு சித்த மருத்துவத்தில் சிறப்பு சிகிச்சை

    • இன்றைய காலகட்டத்தில் வீட்டில் ஒருவருக்காவது நீரிழிவு உள்ளது.
    • எளிய யோகாசனங்களை 20 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

    வேலூர் சத்துவாச்சாரியில் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை உள்ளது. இங்கு சித்த மருத்துவராக டாக்டர் பிரியங்கா பணிபுரிகிறார். அவர் சர்க்கரை நோய் ஏன் ஏற்படுகிறது? அதற்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது குறித்து கூறியதாவது:-

    சர்க்கரை நோய் என்பது ஒரு வளர்ச்சிதை மாற்றக் கோளாறே அன்றி தனி நோய் அல்ல. சித்த மருத்துவத்தில் இதனை மதுமேகம் அல்லது நீரிழிவு என்று கூறுவர். பொதுவாக உணவு உட்கொண்ட பிறகு அதில் உள்ள சர்க்கரை சத்து கிளைகோலைசிஸ் (சர்க்கரை சிதைவு) என்னும் முறைப்படி குளுக்கோஸ் ஆக உடைகிறது. கணையம், வெளிப்பட்டுள்ள குளுக்கோஸ் அளவை பொறுத்து தானாகவே இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இதுவே ரத்தத்தில் உள்ள குளுக்கோசை எலும்பு, தசை முதலியவை உறிஞ்சிக் கொள்ள உதவுகிறது.

    நீரிழிவுக்கான காரணம்

    கணையத்திலிருந்து இன்சுலின் தேவைக்கும் குறைவாக சுரப்பது அல்லது முற்றிலும் உற்பத்தியாகாமல் இருப்பது அல்லது உடலில் உள்ள உயிரணு அதனை ஏற்காமல் மறுத்தல் என்ற காரணங்களால் நீரிழிவு நோய் உருவாகிறது.

    இன்றைய காலகட்டத்தில் வீட்டில் ஒருவருக்காவது நீரிழிவு உள்ளது. நோய்க்கான மருந்தும், மருந்தின் பக்க விளைவுகளை தவிர்க்க ஒரு மருந்து என மருந்துகளின் பட்டியல் நீள்கிறது. சரியான உணவு, மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம். நவீன மருத்துவத்தில் இன்சுலின் சுரப்பை வைத்து இதனை டைப்-1 மற்றும் டைப்-2 என இருவகைப்படுத்துகின்றனர். குழந்தைகளுக்கு வரும் நீரிழிவு நோயை இளம் நீரிழிவு என வகுத்துள்ளனர். இன்சுலின் முற்றிலும் சுரக்கப்படாத நிலையிலேயே நவீன மருத்துவத்தின் ஆலோசனை தேவைப்படுகிறது.

    இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம், இரவில் அதிக நாவறட்சி, அதிகப்பசி, நன்றாக உண்டாலும் உடல் நாளுக்கு நாள் மெலிவடைந்து கொண்டே வருதல். தோல் வறண்டு சுருங்கி காணப்படல், எப்போதும் களைப்பாக இருத்தல், எளிதில் ஆறாத புண், கால் மரத்து போதல், உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சல் ஆகியவை நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

    கட்டுப்படுத்தும் முறைகள்

    நாம் உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும். எளிய யோகாசனங்களை 20 நிமிடங்கள் செய்ய வேண்டும். கணையத்திற்கு ஆற்றலைத் தரும் யோகாசனங்களை தகுந்த வழிகாட்டுதலின்படி செய்யலாம். புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் இருதயம் மற்றும் ரத்தநாளங்கள் பாதிப்படையும். மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதுடன், உடல் எடையும் கூடுகிறது.

    காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை அருந்தி வருவதால் உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர் மற்றும் வியர்வையின் மூலம் வெளியேற்றப்படும்.

    சேர்க்க வேண்டிய உணவுகள்

    துவர்ப்பு மற்றும் கசப்பு தன்மை அதிகம் உள்ள காய்கனிகளை அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். வாழைப்பூ, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், கொத்தவரங்காய், முருங்கை பிஞ்சு, இளநீர் முதலியவற்றை சேர்க்க வேண்டும். நாவல் பழத்தில் உள்ள ஜம்போலின் க்ளுக்கோசைட் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பயன்படுகிறது. நெல்லிக்காயில் உள்ள தாவர ரசாயனங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

    கருப்பு கவுனி, கருங்குருவை, காட்டுயானம், மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய அரிசிகளை சமைத்து உண்ணலாம். கோதுமை, சம்பா கோதுமை, கேழ்வரகு இவைகளால் செய்யப்பட்ட உணவுகளை உண்ணலாம். சர்க்கரை நோயாளிகள் முற்றிலும் இனிப்புத் தன்மை கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது தவறான கருத்தே. பனைவெல்லம், தேன் முதலியவற்றை மருத்துவரின் அறிவுரையின்படி தக்க அளவு அன்றாடம் உண்ணலாம்.

    தவிர்க்க வேண்டியவை

    மைதா, உயர் கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ள காரணங்களால் ரத்த சர்க்கரை அளவு மிகவும் அதிகமாகிறது. மைதாவில் உள்ள பிளீச்சிங் ஏஜென்ட் நச்சுத்தன்மை உள்ளது. கிட்டத்தட்ட 97 சதவீதம் நார்ச்சத்து கோதுமைகளில் இருந்து இழக்கப்பட்ட நிலையில் மைதா தயாரிக்கப்படுகிறது.

    பதப்படுத்தப்பட்ட சர்க்கரை சேர்ந்த உணவுகளையும், முதிர்ந்த பழங்களையும், அதிக மாவு சத்து நிறைந்த உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    கால்கள், பாதங்களை பராமரிக்க வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் சர்க்கரை நோய் கண்டறிதல் பரிசோதனையை செய்து கொள்வது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண் பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, உயர் ரத்த அழுத்த பரிசோதனை முதலியவற்றை செய்து கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் பிள்ளைகளுக்கும் வரக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளதால் முன்கூட்டியே பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    எளிய மூலிகை மருத்துவம்

    வெந்தயம், பாகற்காய், நெல்லிக்காய், ஆவாரம் பூ, சீந்தில், சர்க்கரை கொல்லி வில்வம், மஞ்சள், பூண்டு, வேப்பிலை சாறு, துளசி, சோயாபீன்ஸ், வெங்காயம், பசலைக்கீரை, வெள்ளரி, இலந்தைபழம், முளைத்தானியங்கள் முதலியவை நல்ல பலன் அளிக்கும்.

    நடைப்பயிற்சி, யோகா பயிற்சி மேற்கொள்ளுதல் மூலமும், சித்த மருந்துகளை டாக்டரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வது மூலமும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×