நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு இவ்வளவு நன்மையா!

நாய் வைத்திருப்பவர்கள் பலரும் தங்களை அறியாமலேயே உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர்?வயதானவர்களுக்கு, அவர்களின் தனிமையில் உணர்ச்சிரீதியான ஆதரவை செல்லப்பிராணிகள் வழங்குகின்றன.
நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு இவ்வளவு நன்மையா!
Published on

"நாயே வந்து சோறு சாப்பிடு, தங்கப்புள்ள வந்து சாப்பிடுடி" என அம்மா வீட்டில் கூறுவார். இதில் நாய் என கூப்பிட்டது, தான் பெற்றப்பிள்ளையை. தங்கப்புள்ள என கூப்பிட்டது வீட்டு செல்லப்பிராணி நாயை. இப்படித்தான் நமது வீடுகளில் நாய்கள் செல்லமாக வளர்க்கப்பட்டு வருகின்றன. அவை ஒரு விலங்காக பார்க்கப்படாமல் வீட்டின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக பார்க்கப்பட்டு வருகின்றன. நாய்மீது விருப்பம் கொல்லாதவர்கள் வீட்டில் பூனையை வளர்ப்பர். சிலர் ஆடு, மாடுகள் வளர்ப்பர். ஆனால் பெரும்பாலானோர் வீட்டில் ஏதாவது ஒரு செல்லப்பிள்ளை(செல்லப்பிராணி) இருக்கும். இதுபோன்ற செல்லப்பிள்ளைகள் வீட்டில் இருப்பதால் நமது மனநலனுக்கும், உடல் நலனுக்கும் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து காண்போம். 

மனநல நன்மைகள்

காவலுக்காகவோ, குழந்தைகள் ஆசைப்பட்டார்கள் என்றோ அல்லது எதோ ஒரு காரணத்தால் நாம் பிராணிகளை வீட்டில் வளர்க்க ஆரம்பித்திருப்போம். ஆனால் அவை குறிப்பாக நாய்கள், நமது மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வைக் குறைக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா? இவை மனிதர்களால் கொடுக்கப்படும் தனிமையை எளிதாக்குகின்றன. உடற்பயிற்சியை ஊக்குவிக்கின்றன. மொத்தமாக நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. செல்லப்பிராணிகளை வைத்திருப்பது நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ள ஒரு உந்துதலை அளிக்கும். அப்படி உங்கள் வீட்டில் செல்லப்பிராணி இல்லை என்றால், உங்களுடைய நண்பர்கள் வீட்டிலோ அல்லது உறவினர்கள் வீட்டிலோ இருந்தால் அவற்றுடன் சென்று விளையாடி பாருங்கள். அது கண்டிப்பாக உங்களுடைய மனநலனுக்கு நன்மை பயக்கும். 

மன ஆரோக்கியத்திற்கு உதவும் செல்லப்பிராணிகள்

ஆரோக்கிய நன்மைகள்

நாய் வைத்திருப்பவர்கள் பலரும் தங்களை அறியாமலேயே உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர் என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆம். நாய் இருந்தால் வீட்டில் நாம் அதனோடு விளையாடிக் கொண்டிருப்போம். அல்லது அது சேட்டை செய்தாலும் அதை பிடிப்பதற்கு அங்கும், இங்கும் ஓடுவோம். அதனை வெளியில் அழைத்துச்செல்வோம். இதில் நமக்கு தெரியாமலேயே நம் உடல் உறுப்புகள் இயக்கம் அடைகின்றன. நடைபயிற்சி மேற்கொள்கிறோம். இந்த தினசரி இயக்கம், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதோடு மார்பகம், புரோஸ்டேட், நுரையீரல், பெருங்குடல் மற்றும் சிறுநீரக புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்குமாம். இவற்றையெல்லாம் தாண்டி செல்லப்பிராணிகளை வைத்திருப்பது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும். விலங்குகள் இருப்பது இரத்த அழுத்தத்தை கணிசமாக குறைக்கிறது. ஏனெனில் விலங்குகளின் உடனிருப்பது மன அழுத்தத்தைக் குறைத்து, உடலை அமைதிப்படுத்துகிறது. நாய்களை வளர்ப்போர் குறைந்த இரத்த அழுத்தம், குறைந்த இதயத் துடிப்பு மற்றும் குறைந்த கொழுப்பு போன்ற மேம்பட்ட இதய ஆரோக்கிய நன்மைகளை பெறுகின்றனர் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. 

முதுமையில் துணையாக இருக்கும் செல்லப்பிராணிகள்

ஆரோக்கியமான முதுமை

செல்லப்பிராணிகளை வைத்திருப்பது வயதானவர்களுக்கு, அவர்களின் தனிமையில் உணர்ச்சிரீதியான ஆதரவை வழங்கும். வேலையால் பிள்ளைகளும், படிப்பால் பேரக்குழந்தைகளும் அவர்களுடன் இருக்கமுடியாத சூழலில், செல்லப்பிராணிகள் எப்போதும் அவர்கள் கூடவே இருக்கின்றன. இது மனஅழுத்தம் மற்றும் அவர்களது தனிமையை குறைப்பதாக தெரிவிக்கின்றனர். உடற்பயிற்சியை ஊக்குவிப்பது மற்றும் மன அழுத்தத்தைக் குறைப்பதுடன், செல்லப்பிராணிகள் வயதானவர்களை அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா போன்ற மறதி நோய்களிலிருந்து விடுபடவும் உதவுகின்றன. செல்லப்பிராணிகள் நம்முடைய துன்பம், தனிமை மற்றும் மனச்சோர்வைக் குறைக்கின்றன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com