பெருஞ்சீரகம் - சீரகம்: வேறுபாடும்.. பயன்பாடும்..

பெருஞ்சீரக விதைகள் இனிமையான அதிமதுரம் சுவையை கொண்டிருக்கும்.சீரக விதைகள் ஒருவித நறுமண வாசனையை கொண்டிருக்கும்.
பெருஞ்சீரகம் - சீரகம்: வேறுபாடும்.. பயன்பாடும்..
Published on

பெருஞ்சீரகம் (சோம்பு) மற்றும் சீரகம் இவை இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இவை இரண்டுமே மசாலா பொருட்கள்தான் என்றாலும் சில தனித்துவமான அம்சங்கள் அவற்றின் அடையாளத்தை வேறுபட வைக்கின்றன.

பெருஞ்சீரகம் என்பது கேரட் குடும்பத்தை சேர்ந்த நறுமண தாவரமாகும். இது இனிமையான நறுமணத்தை கொண்டது. இதன் இலைகள், தண்டுகள், வேர்கள், விதைகள் என அனைத்து பாகங்களையும் பயன்படுத்தலாம். சீரகம் என்பது ஏபிஏசிஸ் குடும்பத்தை சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது மசாலா பொருட்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

பெருஞ்சீரகம் விதைகளுக்கும், சீரக விதைகளுக்கும் இடையே என்ன வித்தியாசம்?

பெருஞ்சீரக விதைகள் இனிமையான அதிமதுரம் சுவையை கொண்டிருக்கும். சீரக விதைகள் ஒருவித நறுமண வாசனையை கொண்டிருக்கும். பெருஞ்சீரகத்துடன் ஒப்பிடும்போது சற்று கசப்பு தன்மை கொண்டிருக்கும். மேலும் பெருஞ்சீரகம் விதைகள் பச்சை நிறத்தில் காணப்படும். சீரகம் பழுப்பு நிறத்தில் காட்சி அளிக்கும். சிலருக்கு இரண்டும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டிருப்பது போல் தெரியும். சீரகத்தை விட பெருஞ்சீரகம் முதிர்ச்சி அடைவதற்கு முன்பே அறுவடை செய்யப்படுவதால் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. சீரக விதைகள் நன்றாக உலர வைக்கப்படுவதால் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

அளவில் வேறுபாடு

இரண்டின் தோற்றமும், வடிவமும் ஒரே மாதிரியாக தெரியலாம். ஆனால் அளவு அடிப்படையில் அடையாளம் காண்பது எளிதானது. பெருஞ்சீரக விதைகளை விட சீரகம் சிறியதாகவும், மெல்லியதாகவும் இருக்கும். இரண்டையும் ஒன்றாக வைத்து பார்த்தால் எளிதாக வேறு படுத்தி விடலாம். சீரகம், பெருஞ்சீரகம் இரண்டும் 0.2 மி.மீ. முதல் 0.3 மி.மீ. வரையே இருக்கும்.

சுவையில் வேறுபாடு

பெருஞ்சீரகம் விதைகள் சீரக விதைகளை விட இனிப்பு சுவை கொண்டவை. இந்த இனிப்பு சுவை வாய் புத்துணர்ச்சிக்கு ஏற்றதாக அமையும். பல நூற்றாண்டுகளாக வாய் புத் துணர்ச்சிக்காக பெருஞ்சீரகம் பயன்படுத்தப் படுவது குறிப்பிடத்தக்கது.

சீரகம் பெரும்பாலும் குழம்புக்கு பயன்படுத்தப்படும் பொதுவான மசாலா பொருளாகும். மேலும் சீரகத்தில் மிளகு போன்ற கசப்பு சுவை சிறிது வெளிப்படும். பெருஞ்சீரகமோ சற்று இனிப்பான சுவை மூலம் முற்றிலும் வேறுபட்டிருக்கும். இரண்டையும் அப்படியே கூட சாப்பிடலாம். எனினும் பெருஞ்சீரகம்தான் பெரும்பாலும் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. சீரகம் வேகவைத்தே உட்கொள்ளப்படுகிறது.

வாசனையில் வேறுபாடு

பெருஞ்சீரகம் மற்றும் சீரகம் இரண்டும் நறுமணத்தில் வேறுபடுகின்றன. சீரக விதையின் மணம் காரமான குழம்பு வகைகளுக்கு மிகவும் ஏற்றது. அதேசமயம் பெருஞ்சீரகம் விதையின் நறுமணம் புத்துணர்ச்சிக்கு ஏற்றது. இதன் இலைகள் மற்றும் தண்டுகள் கூட இனிமையான நறுமணத்தை கொண்டவை. அவை சாலட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.

பயன்களில் வேறுபாடு

பெருஞ்சீரகம், சீரகம் இவை இரண்டுமே உலகம் முழுவதும் பிரபலமான மசாலாப் பொருட்களாகும். பெருஞ்சீரகம் இயற்கையாகவே நறுமணத்தை பரப்பு வதால் அழகுசாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. சீரகம் வாசனை திரவியத்தில் சேர்க்கப்படுகிறது. பல அத்தியாவசிய எண்ணெய்களில் இந்த மசாலாப் பொருட்கள் இரண்டுமே இடம்பெற்று உள்ளன. பெருஞ்சீரகம் இனிப்பு உணவுகளிலும், சீரகம் காரமான குழம்புகளிலும் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன.

சீரக விதைகளுக்கு மாற்றாக பெருஞ்சீரகம் விதைகளை பயன்படுத்தலாமா?

முடியாது. ஏனெனில் இந்த இரண்டு மசாலாப் பொருட்களும் வெவ்வேறு சுவைகள் கொண்டுள்ளன. அவற்றின் வாசனையும் கூட மிகவும் வித்தியாசமானது. இரண்டின் சுவையும், பயன்பாடும் வேறுபடுவதால் ஒன்றுக்கு மாற்றாக மற்றொன்றை கருதமுடியாது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com