ஏ.சி. அறையில் ஜன்னலை திறங்கள்... காற்று வரட்டும்

ஏ.சி.யில் இருந்து வருவது இயற்கையான காற்று கிடையாது.நாம் இருக்கும் அறை எப்போதுமே மூடியிருந்தால், குறிப்பிட்ட சமயத்திற்கு பிறகு, அறைக்குள் இருக்கும் ஆக்சிஜன் அளவு குறைந்துவிடும்.
ஏ.சி. அறையில் ஜன்னலை திறங்கள்... காற்று வரட்டும்
Published on

ஒரு காலத்தில் ஏ.சி. (ஏர் கண்டிசனர்) என்பது வசதியானவர்களின் ஆடம்பர பொருளாக இருந்தது. ஆனால், இன்று அது எங்கும் நிரம்பி விட்டது. ஏ.சி.யை பயன்படுத்தாதவர்கள் என்பவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்.

இப்படி பயன்படுத்துபவர்களில் பலர் ஏ.சி. வசதி வைக்கப்பட்ட படுக்கை அறையின் கதவு, ஜன்னலை யாரேனும் திறந்தால் ஏ... கதவை மூடு ஏ.சி. காற்று வெளியேறுகிறது என்று சொல்வதுண்டு.

உடனே அனைத்து கதவுகளையும் மூடிவிட்டு, வெளிக்காற்று உள்ளே வராத வகையில், அந்த அறைக்குள் கூண்டு கிளியாக அடைப்பட்டு, தூங்குவதை நம்மில் பலர் வழக்கமாக கொண்டுள்ளோம். வெளிக்காற்றுக்கு உள்ளே அனுமதி அளிக்காமல் இருப்பது என்பது, நம் உடலுக்கு நாமே தீங்கு விளைவித்துக்கொள்வதாக அமைகிறது.

ஏனெனில், ஏ.சி.யில் இருந்து வருவது இயற்கையான காற்று கிடையாது. இயற்கையான காற்றில் இருந்து ஈரப்பதத்தை எடுத்து, அதை பயன்படுத்திக் குளிர் காற்றாக கொடுக்கிறது. மேலும் அறையில் உள்ள வெப்பமான காற்றை வெளியேற்றுகிறது. அது இயற்கைக்கு மாறான விஷயம்.

எனவே நாம் இருக்கும் அறை எப்போதுமே மூடியிருந்தால், குறிப்பிட்ட சமயத்திற்கு பிறகு, அறைக்குள் இருக்கும் ஆக்சிஜன் அளவு குறைந்துவிடும். பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளின் பெருக்கமும், பரவலும் அதிகரிக்கும் ஆபத்துகளும் உண்டு. ஆகையால் தான் வெளிக்காற்று அறைக்குள் வருவது அவசியமாகும்.

ஆகையால், ஏ.சி. வசதி செய்யப்பட்ட அறைகளுக்குள் இருக்கும்போது கதவு மற்றும் ஜன்னல்களை முழுவதுமாக மூடாமல், வெளிக்காற்று உள்ளே வர அனுமதிக்க வேண்டும். இதனால் அந்த அறைக்குள் நச்சுத்தன்மை ஏற்படாமல் இருக்கும்.

இதுஒருபுறம் இருக்க, ஏ.சி.யின் பில்டர்களை சரியாக சுத்தப்படுத்துவதுடன், அதை பராமரிப்பு செய்வது என்பதும் அவசியமான ஒன்றாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com