

சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலும் கை வைத்தியத்திலும் காலங்காலமாக அமுக்கரா கிழங்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மலைப்பகுதிகளில் காணப்படும் சிறு செடி வகை.
நரம்புதளர்ச்சி பிரச்சினை இருப்பவர்கள் அமுக்கரா கிழங்கை எடுத்துக்கொள்ளலாம். காலை, மாலை வேளையில் காபி, டீக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் அமுக்கரா கிழங்கு பொடியில் மூன்று பங்கு கற்கண்டு சேர்த்து பசுவின் பாலில் கலந்து குடித்து வர வேண்டும். இதனால் உடலுக்கு வலிமை கிடைக்கும்.
இந்த கிழங்கு கசப்பு சுவை கொண்டது. வாதநோய், நரம்பு தளர்ச்சி, கை, கால் நடுக்கம், மன சோர்வு, தூக்கமின்மை, முதுமையில் ஏற்படும் சோர்வு போன்றவற்றிற்கு அமுக்கரா கிழங்கு சிறந்த மருந்து. பலகீனமான உடலுக்கு இது தெம்புதரும். இதய துடிப்பை சீராக்கும். மனஉளைச்சலில் இருந்து விடுதலைதரும். மூளை செல்களை தூண்டி அதிக புத்துணர்ச்சியை வழங்கும்.
பெண்கள் அமுக்கரா கிழங்கை உணவில் சேர்த்துக்கொண்டால் அதிக பலன் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். தைராய்டு சுரப்பிகளின் செயல்பாடுகளை சீராக்கும். ஹார்மோன் சமச்சீரின்மையால் மாதவிடாய் கோளாறுகள், குழந்தை பேறின்மை போன்றவை ஏற்படும். அதையும் இந்த கிழங்கு சீர்செய்யும். ஆண்களுக்கு இளமையிலேயே ஏற்படும் தலை வழுக்கை, ஆண்மைக் குறைபாடு போன்றவைகளையும் சரிசெய்யும்.
உடல் பலவீனமாக இருப்பவர்கள் அமுக்கரா கிழங்கு எடுத்துக்கொள்ளலாம். இந்த பொடியை நெய்யில் கலந்து ஒரு மண்டலம் வரை சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனம் போகும். உடல் சருமம் பொலிவு கிடைக்கும். ஆயுள் நீடிக்கும். வளரும் பிள்ளைகளுக்கு 2 சிட்டிகையை நெய்யில் கலந்து கொடுக்கலாம். பெரியவர்கள் அரை டீஸ்பூன் அளவு நெய்யில் குழைத்து சாப்பிடலாம். அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். வளரும் பிள்ளைகள் பசியின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டால் தேனில் கலந்து கொடுத்தால் பசியின்மை பிரச்சினை படிப்படியாக குறையும்.