search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் 3-ந்தேதி தேரோட்டம்
    X

    கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம் (உள்படம்-சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள்).

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் 3-ந்தேதி தேரோட்டம்

    • தைத்தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இந்த விழா 5-ந்தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தைத்தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்த விழா வருகிற 5-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

    தைத்தேரோட்ட திருவிழாவின் முதல் நாளான நேற்று அதிகாலை 2.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 3 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தார். பின்னர் கொடிப்படம் புறப்பட்டு வந்து காலை 5.30 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் காலை 6.15 மணிக்கு நம்பெருமாள் கொடியேற்ற மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

    நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நேற்று மாலை 6.30 மணிக்கு திருச்சிவிகையில் புறப்பட்டு உள் திருவீதிகளான 4 உத்திர வீதிகளிலும் வலம் வந்து இரவு 8.15 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு யாகசாலையில் திருமஞ்சனம் கண்டருளிவிட்டு கண்ணாடி அறை சென்றடைந்தார்.

    2-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்படுகிறார். மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது.

    திருவிழாவின் 3-ம் நாளான 28-ந் தேதி காலை சிம்ம வாகனத்தில், மாலை யாளி வாகனத்தில், 29-ந்தேதி காலை இரட்டை பிரபை வாகனத்தில் மாலை கருட வாகனத்தில், 30-ந் தேதி காலை சேஷ வாகனத்தில், மாலை ஹனுமந்த வாகனத்தில், 31-ந் தேதி காலை கற்பக விருட்ச வாகனத்தில், மாலை யானை வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா வருகிறார். 1-ந்தேதி நெல் அளவை கண்டருளுகிறார். 2-ந்தேதி மாலை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 3-ந்தேதி காலை நடைபெறுகிறது. அன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 4.30 மணிக்கு வருகிறார். காலை 4.30 மணிமுதல் காலை 5.15 மணிவரை ரதரோஹணம் (தனுர் லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு உத்திர வீதிகளிலும் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது. 4-ந்தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான பிப்ரவரி 5-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×