ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை மாசி தெப்ப உற்சவம்

மூன்று முறை தெப்பம் வலம் வரும். 3-ந்தேதி மீண்டும் நம்பெருமாள் புறப்பட்டு தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் வருவார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை மாசி தெப்ப உற்சவம்
Published on

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்ப உற்சவம் கடந்த 23-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. . இதை முன்னிட்டு தினமும் உற்சவர் நம்பெருமாளுக்கு காலை, மாலை இரு வேளைகளிலும் புறப்பாடுகளும், மண்டகப்படிகளும், பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா காட்சிகளும் நடந்து வருகின்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா நாளை (வியாழக்கிழமை) இரவு நடக்கவுள்ளது.

இதையொட்டி நாளை மதியம் உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து உபநாச்சியார்களுடன் புறப்பட்டு மாலையில் ஸ்ரீரங்கம் மேலவாசல் பகுதியில் உள்ள தெப்பக்குளத்தின் வடகரையில் உள்ள ஆஸ்தான மண்டபம் வந்து சேர்வார். இரவு 7.30 மணியளவில் சிறப்பு அலங்காரத்துடன் பெருமாள் தாயார் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளியபின் தெப்ப உற்சவம் தொடங்கும். மூன்று முறை தெப்பம் வலம் வரும்.

மூன்றாவது சுற்றின்போது இரவு 9.15 மணியளவில் பெருமாள் தாயார் தெப்பக்குளத்தின் மையமண்டபத்தில் எழுந்தருள்வர், அங்கு அலங்காரம் அமுது செய்விக்கப்பட்டபின், மீண்டும் பெருமாள் தாயார் தெப்பத்தில் ஏறி சுற்றை நிறைவுசெய்தபின் கரையேறுவர், அதைத்தொடர்ந்து உபயக்காரர்கள் மரியாதைக்குப்பின் மேற்கு மற்றும் வடக்குவாசல் வழியாக இரவு 11.15 மணியளவில் மூலஸ்தானம் சேருவர்.

அடுத்தநாள் (3-ந்தேதி) மாலை மீண்டும் நம்பெருமாள் புறப்பட்டு தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் வருவார். அதனைத் தொடர்ந்து இரவு ஒற்றைபிரபை வாகனத்தில் பந்தக்காட்சியுடன் பெருமாள் கோவில் திரும்புவார். அத்துடன் தெப்பபோற்சவ நிகழ்ச்சிகள் நிறைவடையும்.

X

Maalai Malar
www.maalaimalar.com