search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 5-ந்தேதி தேரோட்டம்
    X

    கோவில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 5-ந்தேதி தேரோட்டம்

    • 10-ந்தேதி தெப்ப உற்சவம், பரிவேட்டை நடக்கிறது.
    • 12-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.

    காங்கயம் அடுத்த சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலின் தைப்பூச தேர்த் திருவிழா கடந்த 27-ந் தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் தேர்த்திருவிழாவுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. நேற்று காலை 6 மணிக்கு வீரகாளியம்மன் மலைக் கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜையும், மயில் வாகன அபிஷேகமும் நடைபெற்றது.

    11 மணியளவில் விநாயகர் வழிபாடும் தொடர்ந்து முருகன் கோவில் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் மதியம் 12 மணியளவில் கொடி ஏற்றப்பட்டது. இதனை கட்டளைதாரர் 24 நாட்டு கொங்கு நாவிதர்கள் செய்திருந்தனர். பின்னர் சாமி சப்பரத்தில் மலையை வலம் வந்தார். 1 மணிக்கு சாமி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளல் பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து தினசரி காலை 9 மணிக்கு காலசாந்தி மற்றும் திருக்கோவிலில் பல்வேறு சமூக மக்களின் சார்பில் மண்டபக்கட்டளை நடைபெறும். வருகிற 4-ந் தேதி காலை 10 மணிக்கு மைசூர் பல்லக்கில் சுவாமி மலையை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 5-ந் தேதி நடைபெற இருக்கிறது. அன்று காலை 6 மணிக்கு மகர புஷ்ய நல்லோரையில் சுவாமி ரதத்திற்கு எழுந்தருளுகிறார். மாலை 4-மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்குகிறது.

    வருகிற 6, 7 தேதிகளில் மலையை வலம் வரும் தேர் 7-ந் தேதி நிலையை வந்தடைகிறது. 10-ந் தேதி தெப்ப உற்சவம், பரிவேட்டை நடைபெறுகிறது. 11-ந் தேதி பகல் 12 மணிக்கு மகா தரிசனம் நடைபெறுகிறது. 12-ந் தேதி பகல் 12 மணிக்கு தீர்த்தவாரியும், 14-ந் தேதி இரவு கொடி இறக்குதல் மற்றும் பாலிகை நீர்த்துறை சேர்த்தலுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது. தேர்த்திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×