search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அரோகரா கோஷம் விண்ணதிர முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்
    X

    திருமண கோலத்தில் அருள்பாலித்த முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை.

    "அரோகரா" கோஷம் விண்ணதிர முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்

    • 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    • 16 வகை தீபாராதனை நடந்தது.

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் "காவடி திருவிழா" என்று அழைக்கப்படும் பங்குனி உத்திரம் தனிசிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 29-ந்தேதி உபகோவிலான திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவையொட்டி தினந்தோறும் மண்டகப்படி நடந்து வருகிறது. மேலும் காலை, மாலையில் வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருவிழாவின் 6-ம் நாளான நேற்று மாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு சன்னதி வீதி, கிரிவீதிகளில் தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

    மதியம் 3 மணிக்கு அடிவாரம் சவுமிய நாராயண கவர நாயக்கர் மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கின. இதைத்தொடர்ந்து புண்ணியாக வாஜனம், கலசபூஜை, மாங்கல்ய பூஜை, ஸ்கந்த யாகம், சுப்பிரமண்யா யாகம், பூர்ணாகுதி நடைபெற்றது. இதையடுத்து திருக்கல்யாண சடங்குகள் நடைபெற்றன.

    முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 6.45 மணிக்கு முத்துக்குமாரசுவாமிக்கும், வள்ளி-தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா', 'வீர வேல் முருகனுக்கு அரோகரா', 'ஞான தண்டாயுதபாணிக்கு அரோகரா' என்று விண்ணதிர கோஷமிட்டனர்.

    இதைத்தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி, 16 வகை தீபாராதனை நடந்தது. பின்னர் ஓதுவார்கள் தேவாரம் பாடி, கோவில் குருக்கள் வேத பாராயணம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் மற்றும் குருக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×