பழனி தைப்பூச திருவிழா: தெப்பத்தேரில் முத்துக்குமாரசாமி, வள்ளி- தெய்வானையுடன் உலா

தெப்பத்தேர் 3 முறை தெப்பக்குளத்தில் வலம் வந்தபோது வாண வேடிக்கை நடைபெற்றது.தெப்ப உற்சவ நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தெப்ப உற்சவ நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம். (உள்படம்: தெப்பத்தேரில் முத்துக்குமாரசாமி வள்ளி- தெய்வானை).
தெப்ப உற்சவ நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம். (உள்படம்: தெப்பத்தேரில் முத்துக்குமாரசாமி வள்ளி- தெய்வானை).
Published on

அறுபடை வீடுகளில் 3-ம்படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா, கடந்த மாதம் 29-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி தினமும் காலை, மாலையில் தந்தப் பல்லக்கு. புதுச்சேரி சப்பரம், வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் சுவாமி புறப்பாடு, மண்டகப்படி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தேரோட்டம் முறையே கடந்த 3, 4-ந்தேதிகளில் நடைபெற்றது.

வெகுவிமரிசையாக நடைபெற்ற பழனி தைப்பூச திருவிழாவின் 10-ம் நாளான நேற்று இரவு தெப்ப உற்சவத்துடன் நிறைவு பெற்றது.

முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையை தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்துக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு 6 கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து ஓதுவார்கள் பண்பாடி மகா தீபாராதனை நடைபெற்றது.

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'அரோகரா அரோகரா' என்று சரண கோஷம் எழுப்பினர். பின்னர் முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானையுடன் தெப்பத்தேரில் எழுந்தருளினார். தெப்பத்தேர் 3 முறை தெப்பக்குளத்தில் வலம் வந்தபோது வாண வேடிக்கை நடைபெற்றது. இதனையடுத்து தெப்பத்தேர் நிறுத்தப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

பின்னர் பெரியநாயகி அம்மன் கோவிலில், முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானை தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளினார். பிறகு இரவு 11 மணிக்கு கொடி இறக்கத்துடன் தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்றது.

தெப்ப உற்சவ நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜை நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் மற்றும் பழனி தெப்ப உற்சவ விழா கமிட்டி ஆகியோர் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

தைப்பூச திருவிழா நிறைவு நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருஆவினன்குடி, பழனி மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் காலை 6 மணி முதலே தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

இதேபோல் பாதவிநாயகர் கோவில் பகுதியில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்வதற்கு நேற்று 3 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. மேலும் பாதயாத்திரை பக்தர்கள் அலகு குத்தி கிரிவீதியை சுற்றி வந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com