என் மலர்
வழிபாடு

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கள்ளழகர்.
காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது: கள்ளழகர், நாளை மதுரை புறப்படுகிறார்
- 5-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நடக்கிறது.
- 6-ந்தேதி தேனூர் மண்டபத்தில் காட்சி தருகிறார்.
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை பெருந்திருவிழா நேற்று மாலை தொடங்கியது. இதில் கள்ளழகர் பெருமாளுக்கு மங்கள இசை முழங்க, வேதமந்திரங்களுடன் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது,
அதன் பின்னர் பல்லக்கில் கள்ளழகர் பெருமாள் புறப்பாடாகி கோவில் வெளி பிரகாரத்தில் வலம் வந்தார். சகல பரிவாரங்களுடன் சென்று திருக்கல்யாண மண்டபத்திற்கு சென்று எழுந்தருளினார்.
அப்போது விசேஷ பூஜைகள், சர விளக்குகள், தீபாராதனைகள் நடந்தன.
சித்திரை திருவிழாவையொட்டி நாளை(புதன்கிழமை) மாலையில் மதுரைக்கு தங்கப் பல்லக்கில் கள்ளழகர் புறப்படுகிறார். நாளை மறுநாள் மூன்று மாவடியில் எதிர் சேவையும் 5-ந் தேதி கள்ளழகர் அதிகாலையில் 5.45 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளலும் நடக்கிறது. 6-ந் தேதி காலையில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் காட்சி தருகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.






