தந்தை, தாய் உள்பட 11 பேர் மீது நடிகர் விஜய் வழக்கு

தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா உள்பட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 11 பேர் மீது நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தாய் ஷோபா மற்றும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் விஜய்
தாய் ஷோபா மற்றும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் விஜய்
Published on

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு மத்தியில் அவர்களை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்ய அவரது தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

கட்சித் தலைவராக உறவினர் பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக தாயார் ஷோபா ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. கடந்த ஆண்டு நவம்பரில் இந்த செய்தி தீயாய் பரவிய நிலையில், கட்சியை பதிவு செய்த தகவல் தவறானது என விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை நகர 5-வது உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜய், கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு தொடர்ந்தார்.

ஷோபா, எஸ்.ஏ.சந்திரசேகர்

நடிகர் சி.ஜோசப் விஜய் என்ற பெயரில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் பொதுச் செயலாளரான எஸ்.ஏ.சந்திரசேகர் (தந்தை), பொருளாளர் ஷோபா சேகர் (தாய்) உள்பட 11 பேர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

கடந்த ஏப்ரல் 30-ந் தேதி தொடரப்பட்ட இந்த வழக்கு ஆகஸ்டு 23-ந்தேதி விசாரணைக்கு வந்த போது, வழக்கில் எதிர் மனுதாரர்களில் 6 பேருக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டது. அப்போது எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா, முத்து ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

ஆனால் வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய் தரப்பில் வழக்கறிஞர் எவரும் ஆஜர் ஆகாததால், அந்த பதில் மனுக்களை அவர்களிடமே திருப்பி அளித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 27-ந் தேதிக்கு தள்ளிவைத்து, அன்றைய தினம் பதில் மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com