விஷமக்காரன் விமர்சனம்

வி இயக்கத்தில் சைத்ரா ரெட்டி, அனிக்கா விக்ரமன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘விஷமக்காரன்’ படத்தின் விமர்சனம்.
விமர்சனம்
விமர்சனம்
Published on

வாழ்வில் ஏற்படும் குழப்பங்களுக்கு உளவியல் ரீதியில் தீர்வுகள் காண கவுன்சிலிங் தருபவர் டாக்டர் அக்னி. இவரும் தரங்கிணி என்ற பெண்ணும் தீவிரமாக காதலித்து வருகிறார்கள். வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பத்துடன் இருக்கிறார் தரங்கிணி. அக்னியால் தரங்கிணியின் விருப்பம் நிறைவேறாமல் போகிறது. இதனால் அக்னியை விட்டு தரங்கிணி பிரிந்து சென்று விடுகிறார்.

சில ஆண்டுகள் கழித்து அக்னி, ஐகிரி என்ற பெண் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்துக் கொள்கிறார். இவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தரங்கிணியை சந்திக்கிறார் அக்னி. இருவரும் மீண்டும் பழக ஆரம்பிக்கிறார்கள். இவர்கள் பழக்கத்தை அக்னியின் மனைவி ஐகிரி சந்தேகப்படுகிறார். இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுகிறது.

இறுதியில் அக்னி, மனைவி ஐகிரியுடன் வாழ்ந்தாரா? காதலியுடன் வாழ்ந்தாரா? அக்னியின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் அக்னி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வி, இப்படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். முக்கோண காதல் கதையை வித்தியாசமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாதது படத்திற்கு பலவீனம். ஆனால், கடைசி 20 நிமிடம் ரசிக்க வைத்திருக்கிறார். தரங்கிணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சைத்ரா ரெட்டி, மாடர்ன் பெண்ணாக வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். அதுபோல், ஐகிரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனிக்கா விக்ரமன் குடும்ப பெண்ணாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.

படத்தில் அக்னி, தரங்கிணி, ஐகிரி என்னும் 3 கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள். இவர்களை சுற்றியே திரைக்கதை நகர்வதால், ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது. அதே சமயம் மூன்று கதாபாத்திரங்களும் பேசுகிறார்கள்.... பேசுகிறார்கள்... பேசிக்கிட்டே இருக்கிறார்கள். அதிக வசனங்களை தவிர்த்திருக்கலாம். 

கல்யாணின் ஒளிப்பதிவையும், கவின், ஆதித்யா இருவரின் இசையையும் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. 

மொத்தத்தில் ‘விஷமக்காரன்’ கிளைமாக்சில் மட்டும் சிறந்தவன்.

X

Maalai Malar
www.maalaimalar.com