‘காலா’ படப்பிடிப்பு அரங்கத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

‘காலா’ படப்பிடிப்பு அரங்கத்தில் அரங்கம் அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
‘காலா’ படப்பிடிப்பு அரங்கத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
Published on

‘காலா’ படத்தின் படப்பிடிப்பு மும்பை தாராவி பகுதியில் நடந்தது. படப்பிடிப்பு முடிந்து ரஜினி சென்னை திரும்பினார்.

‘காலா’ படப்பிடிப்பில் மும்பை தாராவியில் படமாக்கப்பட்ட காட்சிகள் போக விடுபட்ட காட்சிகள் சென்னை பூந்தமல்லியை அடுத்த பழஞ்சூரில் உள்ள பிலிம்சிட்டியில் படமாக்கப்பட உள்ளன.

இதற்காக அங்கு ‘தாராவி’ போல பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணிகள் பல நாட்களாக நடந்து வருகிறது. நேற்று அரங்கம் அமைக்கும் பணியில் பூந்தமல்லியை அடுத்த மேப்பூரைச் சேர்ந்த மைக்கேல் என்கிற ராஜேஷ் என்ற தொழிலாளி ஈடுபட்டிருந்தார்.

அரங்கம் அமைக்கும் பணியின் போது மைக்கேல் நாற்காலியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு அரங்கத்துக்குள் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கீழே கிடந்த மின்சார வயரை அவர் மிதித்து விட்டார். இதில் அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

அவரை மற்ற தொழிலாளர்கள் மீட்டு பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com