கோச்சடையான் பட விவகாரம்: ரூ.6.20 கோடி கடனை திருப்பி தர லதா ரஜினிகாந்த்துக்கு உத்தரவு

‘கோச்சடையான்’ பட விவகரத்தில் மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் சார்பில் லதா ரஜினிகாந்த் ரூ.6.20 கோடி கடனை திருப்பி தர வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Kochadaiyan #Rajinikanth
கோச்சடையான் பட விவகாரம்: ரூ.6.20 கோடி கடனை திருப்பி தர லதா ரஜினிகாந்த்துக்கு உத்தரவு
Published on

நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து அவரது மகள் சவுந்தர்யா கோச்சடையான் 3டி அனிமே‌ஷன் படத்தை இயக்கினார்.

இப்படத்துக்காக ரஜனிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் இயக்குனராக உள்ள மீடியா ஒன் குளோபால் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெங்களூரைச் சேர்ந்த ஆட்பீரோ நிறுவனத்திடம் ரூ.10 கோடி கடன் வாங்கியது. இந்த கடனுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து இருந்ததாக தெரிகிறது.

மேலும் அந்த நிறுவனத்துக்கு கோச்சடையான் பட விநியோக உரிமத்தில் 12 சதவீதம் வழங்குவதாக ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் பட உரிமையையும் தராமலும், கடனையும் திருப்பி தராமலும் இழுத்தடிப்பதாக ஆட்பீரோ நிறுவனம் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அதில் கடனாக வாங்கிய தொகையில் ரூ.8.70 கோடியை மட்டுமே திருப்பி தந்ததாகவும், மீதி தொகையை தரவில்லை என்று கூறி இருந்தது. ஆனால் இந்த மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து ஆட்பீரோ நிறுவனம் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. லதா ரஜினிகாந்த்தின் மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தரப்பில் தெரிவித்தபோது, ரூ.10 கோடி கடன் தொகையில் ரூ.9.20 கோடியை திருப்பி செலுத்தி விட்டதாகவும் ரூ.80 லட்சம் மட்டுமே திருப்பி தர வேண்டும் என்று கூறியது.

ஆனால் ஆட் பீரோ நிறுவனம், கடன் தொகைக்கான வட்டியுடன் சேர்த்து ரூ.14.90 கோடி தர வேண்டும். இதில் ரூ.8.70 கோடி திருப்பி தந்து விட்டனர். மீதி தொகையான ரூ.6.20 கோடியை தர வேண்டும் என்று கூறி இருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆட் பீரோ நிறுவனம் தெரிவித்த ரூ.6.20 கோடியை 12 வாரத்துக்குள் மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் செலுத்த வேண்டும். தவறினால் லதா ரஜினிகாந்த் செலுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #Kochadaiyan #Rajinikanth

X

Maalai Malar
www.maalaimalar.com